Monday, June 29, 2009

ஜார்கண்ட் விவசாயிகளின் சோகம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

என்பது வள்ளுவர் வாக்கு.

ஆனால் என்று என்ன நடக்கின்றது? உழுதுண்டு வாழ்பவர் தொழுதுண்டு வாழ்பவர்களின் தயவை நாட வேண்டிய அவல நிலையே நிலவுகின்றது.

இன்றைய தினசரிகளின் பிரதான செய்தி ஜார்கண்ட் விவசாயிகளின் 'மத்திய அரசிடம் தற்கொலை அனுமதி கேட்கும் கோரிக்கை'. அந்த அளவில் உள்ளது நாடு. இத்தாலி காங்கிரஸ் அறுபதாயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கொடுத்தோம் என்று சொல்லி சொல்லியே தேர்தல் களம் கண்டது. எங்கே சென்றது இந்த பணம்? கடன் வாங்கி அதை கட்டாமல் உடல் வலிமையாலும், செல்வாக்காலும் ஏமாற்றியவருக்கே சென்றது அந்த பணம்.

அப்படியென்றால் ஒழுங்காக கடனை திருப்பி கட்டியவர்களின் கதி? இது போன்ற தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கோரிக்கை தான். அந்த 60 ஆயிரம் கோடியை இலவசமாக தராது விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தாலே இன்று வங்கத்தில் மிகுதியாக வீணாகிக்கொண்டிருக்கும் நீரை ஜார்கண்ட் மாநிலத்தின் பக்கமாக திருப்பியிருக்கலாம். அவர்களும் ஓஹோ என்றில்லாவிட்டாலும் ஓரளவாவது பிழைத்திருப்பார்கள்.

இந்நிலையிலும் அமைச்சர் திரு.சரத் பவார் அவர்கள் பருவ மழை தாமதமானாலும் விவசாயம் பாதிக்கப்படவில்லை. விளைச்சல் அமோகமாக உள்ளது என்று பொய் பேசிக்கொண்டிருக்கின்றார். ஏற்கெனவே மரபணு மாற்ற விதைகளால் நைந்து போயிருக்கும் விவசாய சமூகம், 1.5 லட்சம் தற்கொலைகளை கண்டிருக்கின்றது. இப்பொழுது புதியதாக வறட்சியை எதிர்கொண்டிருக்கும் விவசாய சமூகம் எத்தனை தற்கொலைகளை காணுமோ?

இறைவா இந்திய விவசாயிகளை இத்தாலி காங்கிரசின் கொள்ளைக்கார அரசிடமிருந்து காப்பாற்று.

Monday, April 28, 2008

மண்ணில் புதைந்த ரோஜாக்கள்

விதியின் கைகள் மட்டுமல்ல, அதன் விரல்கள் கூட மிக வலியது போலிருக்கிறது. செவிலியரின் விரல்களில் இருந்து சிரிஞ்ச் வடிவில் சிரித்த விதி, பொன் போன்ற நான்கு மழலைகளை புதைகுழிக்கு அனுப்பிவிட்டது. ஆம்! திருவள்ளூர் மாவட்டத்தில் விதி தட்டம்மை தடுப்பூசி வடிவத்தில் வந்து நான்கு தளிர்களைச் சாய்க்கும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? பிறந்து பத்து மாதங்கள் முடிவடைவதற்குள் அந்த மழலைகளை மரணத்தின் பசிக்குப் பறிகொடுத்து விட்டு, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் அதன் பெற்றோர்கள்.

அந்தச் சம்பவம் நடந்த நாளை கறுப்புப் புதன் என்றுதான் சொல்ல வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டையில் உள்ள கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த செவிலி ஒருவர், வீடுவீடாக குழந்தைகளுக்கு தட்டம்மை (மீசிலியஸ் வேக¢சின்) தடுப்பூசி போட வந்திருக்கிறார். முதலில் மோகன், ஒளியராணி தம்பதியின் ஒரே குழந்தையான மோகன ப்ரியாவுக்கு அவர் ஊசி போட்டிருக்கிறார்.

அடுத்ததாக சுகந்தியின் குழந்தை பூஜாவுக்கு ஊசி குத்தப்பட்டுக் கொண்டிருந்தபோதே மோகனப்ரியாவுக்கு லேசாக வலிப்பு வந்திருக்கிறது. ‘ஊசி குத்திய வலியால் மோகனப்ரியா துடிக்கிறாள், வேறு ஒன்றுமில்லை’ என்ற எண்ணத்தில் மூன்றாவதாக இருந்த அற்புதம் என்பவரின் குழந்தை நிவேதா நந்தினிக்கும் ஊசி போட்டிருக்கிறார், அந்தக் கடமை தவறாத செவிலி. அவ்வளவுதான். மூன்று குழந்தைகளுக்கும் வலிப்பு ஏற்பட்டு, வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியிருக்கிறது. பிஞ்சு உடல்கள் நீலம்பாரிக்க ஆரம்பித்தன.

துடித்துப் போனார்கள் பெற்றோர்கள். ‘அய்யோ நான் என்ன செய்வேன்?’ என்ற அலறலுடன், அந்தச் செவிலியின் துணையோடு குழந்தைகளைத் தூக்கிக¢ கொண்டு கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடியிருக்கிறார்கள். அங்கே குளுக்கோஸ் ஏற்றியும் நிலைமை சீர்படவில்லை. அங்கிருந்த செவிலியர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் கேட்டிருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் வந்து விடுகிற வாகனமா? ‘அதோ இதோ’ என்று திருவள்ளூர் மருத்துவமனையில் இருந்தவர்கள் சால்ஜாப்பு சொன்னார்களே தவிர, ஆம்புலன்ஸைக் காணோம்.

இங்கோ அழுகையும், கதறலுமாக பெற்றோர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்க, ஒருமணி நேரம் இந்த காத்திருப்பிலேயே ஓடிப்போனது. இனிமேலும் காத்திருந்து பயனில்லை என்ற நிலையில், கூலிவேலை செய்து குருவி மாதிரி சேர்த்த பணத்தில் நானூறு ரூபாயைக் கொடுத்து வாடகை கார் ஏற்பாடு செய்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் பெற்றோர்கள். அங்கே குழந்தைகள் ஏற்கெனவே இறந்து விட்டதாக உதட்டைப் பிதுக்கி விட்டார்கள் டாக்டர்கள். அவ்வளவுதான். ஆபத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய தடுப்பூசியே அந்த மூன்று குழந்தைகளுக்கும் எமனாகி விட்டது.

குழந்தை நந்தினியை இழந்து குமுறிக் கொண்டிருந்தார் அவளது தந்தை ஏழுமலை. குழந்தையின் தாய் அற்புதத்தை தேற்றக்கூட திராணியில்லாமல் இருந்த அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

‘‘அய்யா எனக்கு ஐம்பத்தஞ்சு வயசாகுது. என் மனைவி அற்புதத்துக்கு நாற்பத்தஞ்சு ஆகுது. முதல் புருஷனால் அவளுக்கு இருபது வருஷமாகக் குழந்தை இல்லை. குழந்தை ஏக்கத்தில் இவள் பைத்தியக்காரி மாதிரி ஆனதால் புருஷன்காரன், இவளை விட்டுவிட்டுப் போய்விட்டான். ஆதரவில்லாத இவளை என் மனைவியே எனக்கு இரண்டாந்தாரமாகக் கட்டிவச்சா. மூணு வருஷம் கழிச்சு இவளுக்குக் குழந்தை உண்டானபோது இவ அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இந்த வயசில் அபூர்வமா பிறந்த குழந்தையை பொத்திப் பொத்தி வளர்த்தா. இப்போ அந்தக் குழந்தையைப் பறிகொடுத்திட்டு பைத்தியக்காரி மாதிரி இவ தனியா கதறிக்கிட்டு இருக்கா பாருங்க. இந்த வயசில இனி எங்களுக்கு எப்படிய்யா திரும்பவும் குழந்தை பிறக்கும்?’’ என்று தோளில் கிடந்த துண்டால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழத்தொடங்கினார் ஏழுமலை.

‘‘என் குழந்தையை உயிரோடு தரச் சொல்லுங்கய்யா. காசு, பணம் எங்கிட்ட கொஞ்சம்தான் இருக்கு. இருந்தாலும் என் மகளை ராணி மாதிரி பார்த்துப்பேன்’’ என்று நம்மைப் பார்த்துக் கேட்ட அற்புதத்தின் முகத்தில் தெரிந்த சோகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

பலியான மற்றொரு குழந்தை மோகனப்ரியாவின் தந்தை மோகனிடம் பேசினோம். ‘‘குழந்தைக்கு ஊசி குத்தியதும் வாயில் இருந்து நுரை தள்ளியதைப் பார்த்து என் மனைவி மயங்கி விழுந்து விட்டாள். குழந்தை இறந்தது கூட இன்னும் தெரியாமல் பித்துப் பிடித்தவள் போல் மகளுக்காக வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறாள். அய்யோ, நான் வெறும் கையோடு போனால் அவள் செத்தே போய்விடுவாளே’’ என்று தலைப்பிரசவத்தில் பிறந்த மகளை இழந்த துயரத்தில் கதறி அழுதார் மோகன்.

குழந்தையை இழந்த இன்னொரு தாய் சுகந்தி, அழுது கண்ணீர் வற்றிப் போன நிலையில் தன் கணவர் அல்லிமுத்துவின் தோளில் சாய்ந்து தேம்பிக¢ கொண்டிருந்தார். ‘‘குளுக¢கோஸ் பாட்டிலோடு என் குட்டி மகள் பூஜாவை கையில் ஏந்திக¢ கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தேன். குழந்தை உயிர் போயிடுச்சுன்னு சொல்லி என்னைச் சாகடிச்சிட்டாங்களே.. நடுராத்திரியில எழுந்து பசியில் அழுவாளே என் செல்லம். அவளை அறுத்து சோதனை பண்ணப் போறாங்களாம். ஐயோ! வேண்டாம்னு சொல்லுங்கய்யா!’’ என்று சோகத்தில் குலுங்கினார் சுகந்தி.

இதற்கிடையே, தட்டம்மை தடுப்பூசி திருத்தணி அருகிலும் அதன் வேலையைக் காட்டிவிட்டது. அங்கே வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்த குப்பையா என்பவரின் மகன் லோகேஷ் என்ற பதினொரு மாதக¢ குழந்தையையும் தடுப்பூசி பலி கொண்டு விட்டது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பியும் பலனில்லாமல் குழந்தை லோகேஷ் இறந்து போனான். இந்த இரு சம்பவங்களிலும் தடுப்பூசி குத்திய செவிலிகள் ஜெயலலிதா, பார்வதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதோடு தமிழகம் முழுவதும் தட்டம்மை தடுப்பூசி போடுவது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பென்னலூர், மற்றும் வெங்கிட்டாபுரம் பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி குத்தப்பட்ட நான்கு குழந்தைகள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த மூன்று பெண் குழந்தைகளையும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.சிவாஜி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அமைச்சரிடம் பேசினோம். ‘‘மத்திய அரசு சார்பில், அனுப்பப்படும் தடுப்பு மருந்துகளே நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட தட்டம்மை தடுப்பு மருந்து, அரசின் பொதுத் துறை நிறுவனமான ஹைதராபாத்தில் உள்ள ‘ஹியூமன் பயாலாஜிக¢கல் இன்ஸ்டிடியூட்’டில் இருந்து வாங்கப்படுகிறது. தவறு எங்கு நடந்தது? என்று விசாரணையில் தெரிய வரும். முதல்கட்டமாக, சம்பந்தப்பட்ட தடுப்பு மருந்துகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்’’ என்றார் அவர். அதன்படியே ஆய்வுக்காக இமாசல பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலரிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘நாடு முழுவதும் உள்ள ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடுகிறோம், தகுந்த பயிற்சி பெற்ற ஆரம்ப சுகாதார நிலைய செவிலிகள் அதாவது, மகப்பேறு உதவியாளர்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் போட அனுமதிக¢கப்படுகிறார்கள். குழந்தைகள் இறப்பதற்குக¢ காரணமாக இருந்த மருந்தை 2010_ம் ஆண்டு வரை பயன்படுத்த முடியும். இந்த மருந்தை இரண்டில் இருந்து எட்டு டிகிரி செல்சியஸ் என்ற தட்பவெப்ப நிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஆயுட் காலம் (எக்ஸ்பயரி டேட்) முடிந்த மருந்தையோ அல்லது குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் பராமரிக்கப்படாத மருந்தையோ பயன்படுத்தினால்தான் அது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது’’ என்றனர் அவர்கள்.

மற்றொரு தரப்பு அதிகாரிகள் கூறிய தகவலோ வேறு மாதிரியாக இருந்தன. ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தத் தட்டம்மை தடுப்பூசி மருந்து புனேயில் உள்ள ‘ஸ்ரீராம் வேக¢சின்’ நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு திடீரென ஹைதராபாத் ‘ஹியூமன் பயாலாஜிக¢கல் இன்ஸ்டிடியூட்’டில் இந்த மருந்தை வாங்க ஆரம்பித்தது. புனே நிறுவனம் சப்ளை செய்த ஒரு டோஸ் மருந்தின் விலை எட்டு ரூபாய். ஹைதராபாத் நிறுவனம் ஏழு ரூபாய்க்கு விநியோகம் செய்ய ஒப்புக் கொண்டதால், மத்திய அரசு இப்படி நிறுவனத்தை மாற்றியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரத்தில் உள்ளூர் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்த நிறுவனங்களை மூடக¢கூடாது என்று அங்குள்ள தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புக் காட்டுவதால் அங்கே தடுப்பு மருந்துகள் தொடர்ந்து உற்பத்தியாகி நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி தரமற்ற தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டால் குழந்தைகள் மரணமடைய யாரைக் கேட்க வேண்டும்?’’ என்றனர் அவர்கள். அரசின் அலட்சியமோ? அதிகாரிகளின் அலட்சியமோ? சின்னச்சின்ன ரோஜாக்களை மண்ணுக்குள் போட்டுப் புதைத்துவிட்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்.

ஸீ வெற்றி
படங்கள்: கென்னடி

ஆற்காட்டார் என்ன சொல்லப் போகிறார்?

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் போலியோ, தட்டம்மை உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் பராமரிக்க வேண்டியது அவசியம். மின்சாரம் தடைபடும்போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மருந்துகளை எடுத்து அதற்கென உள்ள பெட்டிகளில் ஐஸ்கட்டிகளுக்கு நடுவே வைத்திருக்க வேண்டுமாம்.

ஆனால், கடந்த சில மாதங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் அந்த மருந்துகளை முறைப்படி பராமரிக்க முடியாமல் போயிருக்கலாம் என்று ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதுதான் கேள்வி.

தனியாருக்குப் போகும் தடுப்பூசி மருந்து உற்பத்தி!

தட்டம்மை தடுப்பூசியால், திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் இறந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் இரண்டு லட்சம் குழந்தைகளுக்கு இதே தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், அவர்களின் கதி என்ன என்று பதறிப்போய் உள்ளனர் தாய்மார்கள்.

இதுபற்றி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களான குன்னூர் லூயி பாஸ்டியர் ஆய்வு நிறுவனம், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், இமாசலப் பிரதேசத்தில் உள்ள கசாலி ஆய்வு நிறுவனம் ஆகியவை லாப நோக்கில்லாமல் கடந்த நூறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றை மூடிவிட்டு தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. ‘இந் நிறுவன மருந்துகள் தரமில்லை, சான்றிதழ் தர மாட்டோம்’ என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வது இவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனமும், பொதுத்துறையும் இணைந்து நானூறு ஏக்கர் பரப்பளவில் போலியோ சொட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை செங்கல்பட்டில் அமைக்க முடிவு செய்துள்ளன. இதற்காக கடந்த வாரம் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அன்புமணி கலந்து கொண்டார். இதுவரை போலியோ மருந்து தயாரிப்பில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத இந்துஸ்தான் நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் தரம் எப்படி இருக்கப் போகிறது?

பல நேரங்களில் காலாவதியான தடுப்பூசி மருந்துகளைக்கூட தனியார் நிறுவனங்கள், புதிய லேபிள் ஒட்டி அனுப்பி வைக்கின்றன. திருவள்ளூர் சம்பவத்துக்கு இதுகூட காரணமாக இருக்கலாம். வரும் காலங்களில் போலியோ தவிர, மற்ற தடுப்பூசி மருந்துகளைப் போடும்போது, டாக்டர்கள் குழுவும், ஆம்புலன்ஸ§ம் தயாராக இருக்க வேண்டும். மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு போதிய அதிகாரம் கொடுத்து, ஒவ்வொரு மருந்தையும் ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு, குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. இல்லாவிட்டால் இறப்புகளைத் தவிர்க்க முடியாது. தடுப்பூசி மருந்து தயாரிப்பை முழுக்க முழுக்க தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிக்காகவே இதுபோன்ற மரணங்கள் ஏற்படுத்தப்படுகிறதா என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது’’ என்று அதிர்ச்சியூட்டினார் அவர்.

நாம் டாக்டர்கள் சங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியைத் தொடர்பு கொண்டோம். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் பிசியாக இருந்தார். கடைசி வரை நம்மால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்றாலும் மத்திய அரசு சார்பில் விசாரணை செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளார்.

Monday, March 17, 2008

தொடாமலேயே ஷாக் அடிக்கும்

சொன்னதும் சொல்லாததும்

பொதுப் பணித் துறையைப் பிரித்து, நீர் ஆதார நிறுவனம் உருவாக்கப்பட்டபோது ஏற்படாத ஐயமும் அச்சமும் மின்வாரியத்திலிருந்து "மின்சாரம் எடுத்துச்செல்லும் தனிஅமைப்பு' ஏற்படுத்தும்போது தோன்றுகிறது என்றால் - அதற்குக் காரணம் இல் லாமல் இல்லை.

"மின்வாரியத்தைத் துண்டாட மாட்டோம்; மின்சாரத்தை எடுத்துச் செல்லும் அமைப்பு தனியார்மயமாகாது' என்று கூறியுள்ள மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, "2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டம் வெளியான ஒராண்டுக்குள்ளாகவே மின்சாரம் எடுத்துச் செல்லும் பிரிவை தனியாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்' என்றும் கூறியிருக்கி றார்.

இதைச் சொன்னவர், அதே 2003-ம் ஆண்டின் மின்சாரச் சட்டம், ஜனவரி 2004-லிருந்து 5 ஆண்டுகளுக்குள், தனியாருக்கும் மின் விநியோக உரிமம் வழங்குவதை வகை செய்திருப்பதுடன், உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் நிபந்தனைகளையும் கூறி யுள்ளதை ஏன் சொல்லவில்லை? மின்சாரம் எடுத்துச் செல்லும் அமைப்பை ஏற்படுத்துவதன் நோக் கமே, மின்விநியோகத்தைத் தனியார்மயமாக்க வகை செய்யும் முன் னேற்பாடுதான்.

மின்விநியோகத்தைத் தனியார் நிர்வகிப்பது புதிய விஷயமல்ல.

தொடக்கத்தில், தனியார்தான் மின்சாரத்தை அரசிடம் பெற்று மக்க ளுக்கு விநியோகிக்கும் ஏஜன்டுகளாக இருந்தனர். மின்விநியோ கத்தை மின்வாரியமே ஏற்றுக்கொண்ட போதும்கூட, கோவை மாநக ராட்சி 1995 வரையிலும்கூட, மின்வாரியத்திடம் மின்சாரம் பெற்று, மின்விநியோகம் செய்யும் தனிஅமைப்பாகவே நீடித்தது. இதனால், பக்கத்து ஊர்களான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் உள்ள மின் கட்டணத்தைவிட (ஒரு யூனிட்டுக்கு 5 காசுகள்?) அதிகம் வசூலித்த தால், தொடரப்பட்ட வழக்கின் காரணமாக மீண்டும் மின்வாரியமே இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

ஆக, மின்விநியோகம் தனியார் நிர்வகித்திருப்பது புதிய விஷய மல்ல என்றால் ஏன் இந்த அச்சம் என்று தோன்றும். கோவை மாநக ராட்சியின் மின்கட்டணம் சிறிய அளவில் வேறுபடுவதை காண முடிந்ததால் நீதிமன்றத்தை அணுக முடிந்தது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் மின்விநியோகஸ்தர்கள், சிமென்ட் ஆலைகளைப் போல சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாமல் வேறு பெயர்களில் கட்டணத்தை உயர்த்தினால் யாருக்குத் தெரியும்? முன்னர் மின்விநியோகத்திலும், பஸ் போக்குவரத்திலும் ஈடுபட்ட தொழிலதிபர்கள் நியாயமான லாபத்தை மட்டுமே எதிர்பார்த்தவர்கள்.

அவர்களில் ஒரு சிலர் அரசியல்வாதிகளாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய சூழலில், அரசியல்-சார்-தொழிலதிபர்கள் மட்டுமே தனி யார்மயமாகும் அரசுத் துறைகளை ஆக்கிரமிக்கும் பணவலிமை உள் ளவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுமைக்கும் அல்லது நகரங்கள் வாரியாக மின்விநி யோக உரிமத்தை ஒரே நிறுவனமோ, அல்லது ஒரே நிறுவனத்தின் பல பிரிவுகளோ, உள்-ஒப்பந்தமாகவோ எடுத்துக்கொள்வது அரசி யல்-சார்-தொழிலதிபர்களுக்கு மிக எளிமையான விஷயம்.
மின்சாரத்தை எடுத்துச் செல்லும் அமைப்பை தனியார் மயமாக்கி னாலும், அரசே நிர்வகித்தாலும் பெரிய வேறுபாடு இருக்காது. ஏனெ னில், மின்சாரத்தைக் கொண்டுசேர்க்க அனுமதிக்கப்படும் ஒரு சொற் பத் தொகை (வீலிங் சார்ஜ்) மட்டுமே அந்த அமைப்புக்குக் கிடைக் கும். ஆனால் மின்விநியோகம் அப்படியல்ல. லாபம் உள்ளடக்கிய தாக அரசு அனுமதிக்கும் கட்டணத்துடன் சேவைக் கட்டணம், கேபிள் பராமரிப்புக் கட்டணம், மிகைப்பயன்பாடுக்கான உபரி-கட்ட ணம், மீட்டர் பராமரிப்புக் கட்டணம் என புதுப்புது சொல்லாடல்க ளில் ஒவ்வொரு இணைப்புக்கும் குறைந்தது ரூ.10 வசூலித்தாலும் மொத்த லாபம் எத்தனை ஆயிரம் கோடியாக இருக்கும் என்பதை கணக்கிடுவது முடியாத செயல் அல்ல.

இதை நிர்வகிப்பவர்கள் அரசியல் பலம் (எதிர்க் கட்சி, ஆளும் கட்சி என்பது ஒரு விஷயமே அல்ல) உள்ளவர்கள் என்பதால் பொது மக்கள் கேள்வி கேட்கவும் முடியாது.
மின்சாரம் தொட்டால் ஷாக் அடிக்கும். தனியார் மின்விநியோ கமோ தொடாமலேயே ஷாக் அடிக்கும்.

Thursday, January 24, 2008

பங்கு சந்தை வீழ்ச்சி

கடந்த ஒரு வாரமாகவே பங்கு சந்தை பலத்த சரிவுக்குள்ளாகி வருகின்றது. நேற்று 10% வரை சரிந்து பின்னர் 3% மீண்டு முடிவில் 7% இழப்பில் முடிந்திருந்தது. நேற்றைய தின துவக்கத்திலேயே 500 புள்ளிகள் இழப்புடன் மும்பை பங்கு சந்தை துவங்கியது. நேரம் செல்ல செல்ல சிறு முதலீட்டாளர்களூம் F & O முதலீட்டாளர்களும் பயத்தின் காரணமாக ஏகத்திற்கும் பங்குகளை விற்க தொடங்க பிற்பகலில் 2100 புள்ளிகள் வரை சரிவடைந்திருந்தது. எனினும் முதலீடு நோக்கில் கடைசி அரை மணி நேரத்தில் 700 புள்ளிகள் உயர்ந்து 1400+ புள்ளிகள் இழப்புடன் முடிந்தது.

இன்று காலை தொடங்கியதுமே முதலீட்டாளர்களின் பயம் காரணமாக எடுத்த எடுப்பில் 2000+ புள்ளிகள்குறைய பங்கு சந்தை சுமார் 1.5 மணிநேரம் தற்காலிகமாக மூட்டப்பட்டது. மேலும் F & O விற்பனையும் நாள் முழுவது நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் எல்லா முதலீட்டாளர்களூம், தரகர்களும் அரசின் தலையீட்டை எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு கடந்த 2 நாட்களாகவே இருக்கின்றது. அரசு தலையிடாததை கண்டித்து எல்லா வலைதளங்களிலும் பதிவர்களும் முதலீட்டாளர்களும் நிதி அமைச்சரை திட்டி தீர்த்தனர். இன்று காலை அதனால் வேறு வழியின்றி நிதியமைச்சர் திருவாய் மலர்ந்தார்.

அதாவது முதலீட்டாளர்கள் பயம் கொள்ள வேண்டாம். தரகர்களுக்கு தேவையான லிக்விடிட்டி வழங்கப்படும். அதற்காக LIC, UTI ஆகிய நிறுவனங்கள் பங்குகளை வாங்கும் என்று அறிவித்தார். அதன் பின்னர் சந்தை சரிவிலிருந்து மீளத்தொடங்கியது.

இதே காங்கிரஸ் அரசில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது 10 வருடங்களுக்கு முன்னர் இதே ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டுமென்று விருப்பம் மிகக்கொண்டு உலக வங்கியின் வலியுறுத்தல் காரணமாக முயற்சித்தார். அதை அந்த நிறுவன தொழிலாளர்களும் முகவர்களும் பெரிய முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டு சென்று 1 கோடி கையெழுத்துகளை மக்களிடம் பெற்று(சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நானும் ஒரு கையெழுத்து போட்டிருக்கின்றேன்.) குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க தனியார் மயம் என்னும் முயற்சியை உடனடியாக அரசு கைவிட்டது. அதன் பின்னர் தனியாரும் காப்பீடு துறையி அனுமதிக்கப்பட்டு ஏராளமான திடீர் நிறுவனங்கள் முளைத்து LIC ஐ சமாளிக்க முடியாமல் விரைவில் காணாமல் போயின(உம். AMP Sanmar). காரணம் அது கடைப்பிடித்த நேர்மை மற்றும் தரமான சேவை. உச்சகட்டமாக ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் காப்பீடு நிறுவனம் மகாராட்டிரத்தில் தடை செய்யப்பட்டதும் நடைபெற்றது.

அன்று LIC என்னும் தங்க முட்டையிடும் வாத்து தனியார் மயம் என்கிற கத்தியால் வெட்டு பட்டிருந்தால் இன்று பங்கு சந்தை காப்பாற்ற ஒரு நிறுவனம் இல்லாமல் போயிருக்கும். அரசும் முதலீட்டாளர்களை கைவிட்டு தனியார் மயத்தை ஒழித்திருக்கும். என்ன செய்ய தனியாரை காக்கவும் அரசு நிறுவனமே தேவை.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கூற்றை அரசு மீண்டும். மெய்ப்பித்திருக்கின்றது. மேலும் சந்தையில் இந்த வீழ்ச்சி தொடருமானால் அரசு நிச்சயம் PF பணத்திலும் கைவைக்க கூடும்.

சந்தையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக இன்று பங்கு தரகள் பரிமாரிக்கொள்ளும் வாசகம்

Reliance On - Market Gone.

பங்கு சந்தை வீழ்ச்சியில் ரிலையன்ஸ் பவர் ஐபிஓவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுதான் வீழ்ச்சியை துவக்கி வைத்தது. ஆரம்பத்தில் முதல் நாளிலெயே 10 மடங்கு விண்ணப்பங்கள் குவிய அப்பொழுது உடனடியாக பங்கு சந்தை.சிதம்பரம் நாட்டின் அடிப்படை மிகவும் வலிமையாக இருக்கின்றது என்று மார்தட்டினார். அவருடைய நம்பிக்கை இரண்டு நாட்களில் அவநம்பிக்கையாகிவிடும் என்று அப்பொழுது அவர் உணர்ந்திருக்க மாட்டார்.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய எல்லா முதலீட்டாளர்களும் பணத்தை பங்கு சந்தையிலிருந்து எடுக்க தொடங்கியதால் முதல் கட்ட வீழ்ச்சி தொடங்கியது. அதை இறுதி மூச்சில் இருக்கும் அமெரிக்க பொருளாதாரம் தன்பங்கிற்கு உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதனால் வெளிநாட்டு முதலீடு ஏகத்திற்கும் சந்தையிலிருந்ந்து திரும்பபெறப்பட்டது. இதனாலும் சந்தை சரிந்தது. சந்தை சரிவிற்கு முன்னர்தான் ரிலையன்ஸ் பவர் 79 மடங்கு விண்ணப்பம் பெற்றதாகவும் அது சாதனை என்றும் அனில் அம்பானி உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்றும் பத்திரிகைகள் பரபரத்தன. எல்லாமே 2 நாட்கள்தான்.

பங்குச் சந்தை இந்த அனில் அம்பானியை இன்று 1000+ இடத்திற்கும் முகேஷ் அம்பானியை 101 வது இடத்திற்கும் டி.எல்.எஃப். உரிமையளர் கே.பி.சிங்கை 250 ஆவது இடத்திற்கும் உலக அளவில் அழைத்து சென்றுள்ளது. இதன் உச்சமாக ரிலையன்ஸ் பவர் பங்கு கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுது செக்குகளுக்கு ஸ்டாப் பேமண்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன(இதை வதந்தி என்று அனில் அம்பானி கூறியுள்ளார்). இதிலும் ரிலையன்ஸ் சாதனை படைக்கும் என்று நம்பலாம். லிஸ்டிங்கில் 1000 ரூபாய்க்கும் மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் பவர் இப்பொழுது ஒளியிழந்து 450க்காவது வெளியாகுமா இல்லை இன்னும் கீழே வெளியாகுமா என்று எதிர்பார்க்கும் அளவில் உள்ளது.( 16.01.2008 அன்றே கிரே மார்கெட் பிரீமியம் என்றழைக்கப்படும் தொகை 470 இலிருந்து 420 ஆகவும், வெளியீட்டின் இறுதி நாளன்று 320 ஆகவும் நேற்று 150 ஆகவும் தேயந்து போனதிலும் ரிலையன்ஸ் பவர் சாதனை புரிந்துள்ளது.)

இன்றைய பங்கு மார்கெட் வார்த்தை Reliance Power On - India Gone.(இது ரிலையன்ஸ் பவர் விளம்பரங்களில் Riliance Power On - India On என்று வரும்).

விரைவில் அமெரிக்கா பொருளாதார சரிவை(Recession) அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அது அமெரிக்க தேர்தலுக்கு பிறகாவது அறிவிக்கப்படும். அப்பொழுது சந்தை மேலும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நலம் என்பதே இறுதி நீதி.

Monday, January 21, 2008

123 அணு ஒப்பந்தம்

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி நிறையவே பேசப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்று அணுஆயுத ஒழிப்பு மற்றும் அமை திக்கான மக்கள் இயக்கங்களும், பொது அமைப்புகளும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.

இந்த ஒப்பந்தம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று மட்டுமல்ல, அமைதிக்கு எதிரானது, நிலைத்த எரிசக்தி உருவாக்கத்துக்கு எதிரானது, சுயசார்பு பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் மக்கள் கருத்தை அறிவது இருக்கட்டும், நமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்ட ளிக்கக்கூட மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி, மதவாதக் கட்சி என்றால், காங்கிரஸ் அமெரிக்காவின் அடிமைக்கட்சியாக இருக்கிறது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.


இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின்நிலையங்களும், நமது மின்சாரத் தேவையில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே தற்போதுள்ள பூர்த்தி செய்கின்றன. இதை 7 சதவிகிதமாக உயர்த்தப் போகிறார்களாம்.
அதற்காகத்தான் இந்த ஒப்பந்தமாம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது. 3யை 7 ஆக்கவா, பிரதமர் சவால் விடுக்கிறார்? பதவியை ராஜினாமா செய்வேன் என்று மறைமுக மிரட்டல் விடுக்கிறார்?


மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் (!) கைகளில் இந்தியா இருப்பது எவ்வளவு மோசமானது என்று இப்பொழுது புரிகிறது.


இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான். இந்தியா இனி அமெரிக்க அடிமை. நமது வெளியுறவுக் கொள்கைகள் இனி அமெரிக்காவின் கட்டளைப்படியே இயங்கும். இரானை அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லையா. இந்தியாவுக்கும் பிடிக்காது. எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய அணுஆற்றல் அவசியம் என்று மன்மோகன் சிங் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். சரி, இதே எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யத்தானே இரானுடன் குழாய் மூலம் எண்ணெய் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதை ஏன் இரண்டாம் பட்சமாக ஒதுக்க வேண்டும்.


அப்படியானால் அணுசக்தியை அதிகரிப்பது, எரிசக்தி ஆகிய இரண்டும் இந்த ஒப்பந்தத்தைப் பொருத்தவரை முக்கியமானவை அல்ல என்பது புரிகிறது. அதைத் தாண்டி எது முக்கியம்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. சீனாவின் பொருளாதார போட்டியைச் சமாளிக்க பாகிஸ்தான் பயன்படுமா என்று அமெரிக்கா பரிசோதித்துப் பார்த்தது. பாகிஸ்தான் ஒத்துவரும் என்று தோன்றவில்லை. அதைத் தொடர்ந்து அவசரஅவசரமாக இந்தி யாவை கபளீகரம் செய்யப் பார்க்கிறது அமெரிக்கா. அதன் முழுமையான வெளிப்பாடுதான் இந்த ஒப்பந்தம்.


இப்படி இந்தியாவின் எதிர்காலம், வெளியுறவுக் கொள்கைகள், மற்ற நாடுகளுடனான உறவில் ஏற்படும் விரிசல் போன்றவற்றைப் பற்றி மக்கள் கருத்தை துளியும் அறியாமல், ஒப்பந்தத்தை நிறை வேற்றுவது தவறு என்று இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. மக்கள் சார்பில் இடதுசாரி கட்சிகள் ஏற்படுத்திய இந்த நெருக்கடி வரவேற்கத்தக்க அம்சம். நினைத்துப் பாருங்கள், பாரதிய ஜனதா ஆட்சியில் தொடர்ந்திருந்தால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை அனைத்து எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தி இருப்பார்கள். அதுதான் அந்தக் கட்சியின் கொள்கை.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் சாதகமா, பாதகமா என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம் முழுமையாக ஓராண்டு விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் என்ன நடந்தது? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு விடுதலை நாள், குடியரசு நாளின்போது மார்தட்டிக் கொள்ளும் இந்தியா, எந்த வகையிலும் ஜனநாயகத் தன்மையுடன் நடந்து கொள்ளாததையே இது காட்டுகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குள் நேரடியாக கால்பதித்துள்ள அமெரிக்கா, இந்தப் பகுதியில் உள்ள நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை நேரடியாக கட்டுப்படுத்தத் தொடங்கும்.


இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அமைதி முயற்சிகளைத் தொடராமல், ஆயுதப் போட்டியில் இறங்கும். ஆயுத விற்பனையின் ஒரு பாகமாகத்தான் ஆப்கானிஸ்தான், இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியது. அவை முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில், இந்த ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்குமே அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை ஏற்கெனவே விற்று வருகிறது. சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வருகை அதன் ஒரு பகுதிதான்.

இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய சூரியசக்தி, காற்றாலை, கடல்அலை, மனித உழைப்பு போன்றவற்றை மேம்படுத்துவது பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கப்படுவதில்லை. இந்த மாற்று எரிசக்திகளை மேம்படுத்துவதில் அரசு அக்கறை காட்டுவது போல் பெயருக்கு மட்டும் செயல்படுகிறது. மாற்று எரிசக்திகள் மூலமே நமது எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
உண்மையிலேயே அரசு கூறுவது போல் அணுசக்தி சிறந்தது என்றால், அது பற்றி வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கலாமே. விவாதம் நடத்தலாமே. எல்லா நேரமும் ஏன் மூடிமறைத்து நடத்த வேண்டும்?

அடுத்து...


இதுபோன்று நாட்டின் பாதையையே மாற்றியமைக்கக் கூடிய ஒப்பந்தங்கள், சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போன்றவற்றைப் பற்றி ஜனநாயக ரீதியிலான எந்த ஆலோசனைகளும் நடத்தாமல் நிறைவேற்ற இந்திய அரசியல் சாசனத்தில் வழியுள்ளது. முதலில், இது போன்ற ஒப்பந்தங்கள் பற்றி முன்கூட்டியே அறிவித்து, பொது விவாதம் நடத்த வேண்டியது கட்டாயம் என்று அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதில் நமது கருத்தை உறுதியாக வெளிப்படுத்த, நாம் ஒவ்வொரு வரும் ஓட்டளிக்கும் நடைமுறை வேண்டும். இதுவே நமது அடிப்படை கோரிக்கையாக இருக்க வேண்டும். (விஷயமே என்ன வென்று சொல்லாமல் கருத்துக் கணிப்பை நடத்தி தொலைக்காட்சி அலைவரிசைகள், இதழ்கள் தங்களுக்கு வசதியான முடிவை பிரபலப்படுத்துகிறார்கள்.)


இந்த ஒப்பந்தத்தின் எந்த அம்சத்துக்கும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதே உரிமை இந்தியா நாடாளுமன்றத்துக்கு இல்லை. அப்படியானால், இது அடிமை ஒப்பந்தம் இல்லாமல் வேறு என்ன? ஓர் அடிமையே, 'என்னை உங்கள் அடிமையாக வைத்துக் கொள்ளுங்கள். நான் நன்கு உழைப்பேன்' என்று கையெழுத்திட்டு ஒப்படைத்துக் கொண்டது போல் இருக்கிறது.


இந்த ஒப்பந்தம் மூலம் நமது இயற்கை வளம், அறிவு, குறைந்த கூலியில் உழைப்பு ஆகியவை அமெரிக்க முதலாளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. பொருளாதார மேதைகள் ஒட்டுமொத்தமாக நாட்டையே விற்க ஒப்பந்தம் இட்டுள்ளனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


வெள்ளையர்களை வெளியேற்றி நாடு விடுதலையடைந்து 60வது ஆண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், புதிய காலனி ஆதிக்கத்துக்கு மத்திய அரசே வரவேற்று வழியமைத்துக் கொடுத்துள்ளது.

(இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய அருணாராய், மேதா பட்கர், சந்தீப் பாண்டே அறிக்கை)

Thursday, January 17, 2008

ப. சிதம்பரத்துக்கு பாரத ரத்னா விருது பரிந்துரை

நாட்டில் அவரவருக்கு பிடித்த தலைவருக்கு அவரவர் பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏதோ எனக்கு பிடித்த இந்திய தலைவருக்கு நானும் பரிந்துரைக்கலாம் என்று நேற்று முழுக்க மல்லாக்க படுத்து யோசித்து பார்த்ததில் ஒரு ஒப்பற்ற தமிழர் ஒருவர் என் மனதில் தகுந்த காரணங்களுடன் தோன்றினார். அவ்ர் குறித்து என்க்கு தோன்றியவை


நம் இந்திய நாட்டில் கீழ்கண்ட வற்றில் அபரிமிதமான முன்னேற்றத்திற்காக உழைத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க நான் ஆதரிக்கின்றேன்

1. 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை புரிந்துகொள்ளூம் வகையில் திட்டங்களை திட்டமிடு வடிவமைத்து நாட்டின் மக்கள் தொகை குறைப்பில் மாபெரும் தொண்டாற்றியுள்ளார்.

2. பாகிஸ்தான், இலங்கை, சோமாலியா முதலிய தேசங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு குழந்தைகள் சாவில் இந்தியாவை முன்னனிக்கு கொண்டுவந்து சாதனை படைத்துள்ளார்.

3. 4 கோடி ஏழை இந்தியர்களின் காய்கறி விற்கும் உரிமையை பறித்து 4 மிகப்பெரிய பணக்காரர்களை உருவாக்கி பெரும் தொண்டாற்றியுள்ளார். இதனால் 18 லட்சம் பேருக்கு புதியதாக வேலைவாய்ப்பும், 2 கோடி பேருக்கு உடனடி வேலை இழப்பும் ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

4. பங்கு சந்தை சரியும்போதெல்லாம் குரல்கொடுத்து அதை மட்டும் வளர்த்தும், விவசாயிகள் தற்கொலையின் போதும், விவசாய பொருள்களின் உற்பத்தி குறைவின் போதும் கணாமலும் இருந்தும் பட்ஜெட்டில் காகிதத்தில் மட்டும் விவசாயத்தை வளர்க்க உறுதியளித்தும் தொண்டாற்றியுள்ளார்.

5. வறுமைக்கோட்டிற்கான அடிப்படை மாத வருமானத்தை 1990 இலிருந்து தொடர்ந்து ரூ.500 லேயே நிலைநிறுத்தி வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளை 27% ஆக குறைத்து சாதனை படைத்துள்ளார்.

6. அவரது தொகுதியிலேயே குறைந்த பட்ச வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 80ரூ தினக்கூலியை ரூ60 ஆக குறைத்து வழங்கி மக்களுக்கு ஒப்பற்ற சேவையாற்றியுள்ளார்.(இதில் ரூ.20 ஊழல்)

7. நாட்டில் 80% அமைப்பு சாரா தொழிலாளிகளின் தினசரி கூலியை ரூ.20 ஆக பல ஆண்டுகளாக நிலைநிறுத்தி சாதனை புரிந்துள்ளார்.

8. ஊக பேர வணிகத்தில் உணவுப்பொருள்களை உட்படுத்தி நாட்டு மக்களுக்கு திடீரென 3 ஆண்டுகளில் 200% விலையுயர்வை கொடுத்து அற்புதமான சேவை செய்து அதன் மூலம் நாட்டின் ஜி.டி.பி யை உயர்த்தி 9.5% ஜி.டி.பி வளர்ச்சியை உறுதி செய்துள்ளார்.

9. ஏகத்திற்கும் எல்லோருக்கும் வங்கிகளில் கடன் கிடைக்க செய்து பணவீக்கத்தை உயர்த்தி அதன் மூலம் எல்லா பொருள்களின் விலையையும் உயர்த்தி அதன் கணக்கில் ஜி.டி.பி ஐ உயர்த்தி அற்புத சேவைகளை புரிந்துள்ளார்.

இப்படி பல்வேறு காரணங்களுடன் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி ஐயும் பல்வேறு பொருள்களின் விலை உயர்வு மூலம் உயர்த்தி சாதனை படைத்துள்ள தமிழகத்தின் சாதனை நட்சத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பங்குசந்தை.சிதம்பரம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கிட 6 கோடி தமிழர்களின் சார்பில் நான் பரிந்துரைக்கிறேன்.

(ஆட்சேபம் தெரிவிக்க உங்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், எல்லா ஆட்சேபனைகளும் தயவு தாட்சன்யமின்றி நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது).

Saturday, December 29, 2007

பிரதமருக்கு கோவணாண்டி குமுறல் கடிதம்

"மானியத்துல மண் அள்ளிப் போட்டுடாதீங்க!''
பிரதமருக்கு கோவணாண்டி குமுறல் கடிதம்

மாண்புமிகு பாரத பிரதமர் மன்மோகன் சிங் அய்யா அவர்களுக்கு, கோவணாண்டியின் கோடானுகோடி வணக்கமுங்க!

'மானியமும், மக்கள் நலத்திட்டத்துக்கு ஒதுக்கப்படுற பணமும் போய்ச்சேர வேண்டியவங்களுக்கு சேர்றதில்ல. வழியிலயே ஆட்டயப் போட்டுடறாங்க'னு சும்மா நெத்தியடியாச் சொல்லி அசத்திப்புட்டீங்க போங்க.

''அட நாப்பது, அம்பது வருஷமா இதைத்தான நாங்களும் சொல்லிக்கிட்டு இருக்கோம். அப்பல்லாம் தெரியாத உண்மைய, இப்ப எப்படீடா கண்டுபிடிச்சுது இந்த 'சிங்'கக்குட்டினு... நம்ம ஊருக்காட்டுப் பயலுக சிலபேரு நக்கல் அடிச்சிக்கிட்டு திரியறானுங்க. 'இதுக்கும் அமெரிக்காக்காரனோட ராக்கெட் ஏதாச்சும் 'சிங்'கத்துக்கு உதவி யிருக்கும்'னு அநியாயத்துக்கும் அவனுங்க லொள்ளு பண்ணுறானுங்க.



அய்யா மகாகனம் பொருந்திய பிரதமரே, 'ஐயோ திருடன்.. ஐயோ திருடன்'னு சத்தம்போட்டா, அதை காதுல வாங்கிக்கிட்டு, 'ஐயோ திருடன்... ஐயோ திருடன்'னு ஏட்டய்யாவும் சேர்ந்துகிட்டு கூப்பாடு போட்டா எப்படியிருக்கும். அந்தக் கதையால்ல இருக்கு நீங்க கூப்பாடு போடுறது. நீங்கதான் இந்த நாட்டோட தலைமை மந்திரி. நீங்கதானே களவானித்தனங்களைக் கண்டுபிடிச்சி தண்டிக்கணும். ஆனா, நீங்களும்ல 'திருடன்... திருடன்...'னு கூப்பாடு போடுறீங்க.

சிவாஜி நடிச்ச 'தங்கப்பதக்கம்' படத்துல, 'அந்த தெய்வமே கலங்கி நின்னா, யாரால மாமா ஆறுதல் சொல்லமுடியும்'னு ஒரு ஃபேமஸான ஒரு வசனம் வரும். அதுதான்ங்க இப்ப ஞாபகத்துக்கு வருது.

ஏழை, பாழைகளுக்கும், கோவணாண்டிகளான விவசாயிகளுக்கும் அரசாங்கத்தால அஞ்சு பைசா கூட பிரயோஜனம் இல்லைங்கிறது ஊரறிஞ்ச உண்மை... உலகறிஞ்ச உண்மை. அது மானியமா இருந்தாலும் சரி... மண்ணாங்கட்டியா இருந்தாலும் சரி.

''தேனெடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பானா?''னு நம்ம 'திராவிடத்தம்பி'ங்க வேற அதுக்கு நல்லாவே சப்பைக்கட்டு கட்டுவாங்க. இப்பல்லாம் மொத்தத் தேனையும் குடிச்சி முடிச்சிட்டு, புறங்கையையும் கூட தேனெடுக்கறவங்களே நக்கி முடிச்சிடறாங்க. இப்படி மொத்தத்தையும் முழுங்கற வேலை ஒழுங்கா நடக்குதானு பார்க்கறதுதானே நம்ம மக்கள் பிரதிநிதிங்க பலபேரோட முழுநேர வேலையா இருக்கு. இதெல்லாம் உங்களுக்கு தெரியாம இருக்காது. ஆனாலும், 'திடுதிப்'புனு மானிய விஷயத்தை நீங்க கையில எடுத்திருக்கிறதுதான் சந்தேகத்தைக் கிளப்பிவிடுது.

அமெரிக்காவுல ஒரு நாளைக்கு மொத்தமா ஒரு பில்லியன் டாலரை, விவசாயிகளுக்கு நேரடி மானியமாவே கொடுக்கறாங்க. 'ஒரு கிலோ பருத்திக்கு ஒரு டாலர், ஒரு கறவை மாட்டுக்கு தினமும் 3 டாலர்'னு மானியத்தை அள்ளி கொடுக்கிறாரு உங்க பெரிய அண்ணன் புஷ். நீங்களோ, 'ஆடு நனையுதுனு ஓநாய் அழுத' கணக்கா... 'மானியத்தை திருடுறாங்க... மானியத்தை திங்கறாங்க'னு சொல்லிக்கிட்டே, ஒரேயடியா எல்லாத்தையும் நிறுத்திப்புடலாம்னு சதி வேலையில இறங்கிட்டீங்களோனு ஒரே யோசனையா இருக்கு.

உங்க பாஸ்... அதான் உலக வங்கிகிட்ட நீங்க புதுசா ஏதாவது கடன் கேட்டு, அதுக்கான நிபந்தனையா, 'மானியத்தையெல்லாம் நிறுத்து'னு ஏதாவது உள்ளடி வேலைக்கு தூபம் போட்டிருக்குமோனு கவலையா இருக்கு.

சரி, பாவப்பட்ட மக்களோட கையில உரிய வகையில மானியம் போய்ச்சேர வழி செய்யப்போறீங்களா... இல்ல மானியத்தைக் கூண்டோட நிறுத்தப் போறீங்களா?னு கொஞ்சம் தெளிவா சொல்லிப்புடுங்க. ஏன்னா, நீங்கள்லாம் வெளிநாட்டுக் கம்பெனிக் காரனுங்களுக்கு கதவைத் திறந்து விடறதுல குறியா இருக்கீங்க. கதவைத் திறந்துவிட்டா கூட யாராவது நம்மூரு நல்லவங்க அடைச்சுப் புடுவாங்களோனு, வாசல்ல இருக்கற நிலையையும் சேர்த்தே பேத்து எடுத்துப்புடுவீங்களோனு பயமா இருக்கு.

ஒரு பக்கம் மானியத்துல மண் அள்ளிப்போடறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டு, இன்னொரு பக்கம் இறக்குமதிங்கற இடியையும் தலையில இறக்கறீங்க. எண்ணெய், பருப்பு கோதுமைனு ஆரம்பிச்சி, இப்ப நெல்லு தலைவாசல்ல காத்துக்கிட்டு இருக்குது. போன வருஷத்துல 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உணவு தானியத்தை இறக்குமதி செஞ்சு இருக்கீங்க. இருந்தும், இந்தியாவுல 47% மக்கள் வயிறாற ஒரு வேளை கூட சாப்பிட முடியாம, பாதி பட்டினியோட படுக்கைக்கு போறதா ஜ.நா. உணவுப் பிரிவு ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வாசிக்குது. நீங்க என்னடானா, விவசாயித்துறையில 1.7% அளவுல இருந்த ஜீ.டி.பி 3.7% அளவுக்கு தாண்டிக் குதிக்குதுனு 'தையாத்தக்கா' ஆட்டம் காட்டறீங்க.

''இந்தியாவோட உணவு உற்பத்தியை எடுத்துக்கிட்டா, ஒரே ஒரு முறைதான் 212 மில்லியன் டன் அளவை தொட்டிருக்கு. இப்ப 170 மில்லியன் டன்னுல இருந்து 180 மில்லியன் டன்னுக்குள்ளேயே நொண்டி அடிச்சுக்கிட்டு இருக்குது. தனி ஒரு மனுஷனோட சாப்பாட்டை எடுத்துக்கிட்டா, ஒரு வருஷத்துக்கான உலக சராசரி 309 கிலோ. இந்தியாவுல 95-ம் வருஷம் மட்டும் 207 கிலோவை தொட்டுச்சி. இப்ப 2007-ல 186 கிலோவைத் தொட்டு 'சாதனை' புரிஞ்சிருக்கு''னு வெவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க. இதைக் கேக்கறதுக்கே கேவலமா இல்லீங்களா..?

'அட இதுக்கெல்லாம் கேவலம் பார்த்தா, பிரதான் மந்திரியா இருக்கமுடியுமா'னு நீங்க முணுமுணுக்கறது நல்லாவே கேக்குது.

நம்ம நிதி அமைசர் சிதம்பரம் அய்யா, ஒரே ஒரு வார்த்தையை மட்டும் திரும்பத்திரும்ப முனகிக்கிட்டே இருக்கறாராம். அந்தக் கெரகம் பிடிச்ச எங்க ஊரு இங்கிலீஷ் வாத்தியாரு அதைச் சொல்லிக்கிட்டே இருந்தாரு. ஆனா, சமயம் பார்த்து மறந்துபோச்சி. ஆங்... ஞாபகம் வந்துடுச்சி. 'இன்குளூசிவ்' (மிஸீநீறீusவீஸ்மீ). அதாவது, அணைச்சுக்கிட்டு, இணைச்சுக்கிட்டு வளரணும்னு சொல்றாராம் சிதம்பரம்.

ஆனா, எந்தக் கம்பெனி முதலாளியும், கோவணாண்டிகளைக் கிட்டக்கூட சேர்த்துக்கிறதே இல்லீங்களே. எக்ஸ்குளூசிவ் (ணிஜ்நீறீusவீஸ்மீ) தானுங்களே பண்ணுறாங்க. விவசாயிகளை, விவசாயத்தை விட்டு வெளியேத்துறாங்க. சிறுகுறு வியாபாரிங்கள, வியாபரத்தை விட்டு வெளியேத்துறாங்க. கைவினைத் தொழில்கள முடக்கிட்டு, தொழிலாளர்கள விரட்டியடிக்கறாங்க. விளைநிலங்களை பிடுங்கிக்கிட்டு, மக்களை ஊரைவிட்டே வெளியேத்துறாங்க.

ஆகக்கூடி எந்தக் கம்பெனியும் மக்களை இப்ப அணைச்சிக்கறதும் இல்ல, இணைச்சுக்கிறதும் இல்லீங்க. மக்களோட கஷ்டத்தைப் பார்த்துட்டு... மாவோயிஸ்ட்டுங்க... நக்ஸலைட்டுங்க தான் இப்ப மக்களோட கைகோத்துக் கிட்டிருக்காங்க. இப்போதைக்கு 15 மாநிலங்கள்ல நக்ஸலைட்டுங்கதான் இயங்கிக் கிட்டிருக்காங்க. உங்க ஆட்சி முடியறதுக்குள்ள இந்தியா முழுக்கவே நக்ஸலைட்டுகள பரப்பாம விடமாட்டீங்க போல இருக்கு.

கிரிக்கெட்டுக்கு கோச்சு தேடுற முனைப்புல ஒரு பங்கு கூட விவசாயிகளோட வேதனைகளை களையறதுக்கு காட்டுறது இல்லீங்க உங்க விவசாயத் துறை மந்திரி சரத் பவார். அப்படி இருக்கும்போது, பாவப்பட்ட ஜனங்க நக்ஸலைட்டு களோட சேராம என்ன பண்ணுவாங்க?

ஒரு குவிண்டால் கோதுமைக்கு 1,000 ரூபாய் கொடுத்தும் கூட வடக்கத்திய விவசாய நண்பர்கள், கோதுமை விவசாயத்துல அதிகம் நாட்டம் காட்டலீங்க. 'வெளிநாட்டு விஷக் கோதுமையை குவிண்டால் 1,600 ரூபாய்னு இறக்குமதி பண்ணுவாங்க. நாம உற்பத்தி பண்ற நல்ல கோதுமைக்கு வெறும் ஆயிரம்தானா?'னு வெறுத்துப் போய், வேற பக்கம் தாவிட்டாங்க.

நெல்லுக்கும் 800 ரூபாயைக் கூட தாண்டாம இறுக்கிப்புடுச்சிக்கிட்டே இருக்கீங்க. நெல்லு விவசாயிகளும் படுத்துக்கிட்டாங்கனா, அப்பத் தெரியும், அரசியலை வெச்சிக்கிட்டு ஆட்டம் போடுற அய்யாக்களோட வண்டவாளம். 'உலகமய ஆசையால இந்த நிலைமைக்கு எங்களை ஆளாக்கிட்டீங்களே?'னு ஆளாளுக்கு கல்லைத் தூக்கி எறியப்போறாங்க பாருங்க.

'உலகமயம்கறது ஏழை, மூன்றாவது நாடுகள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். ஆயுதங்களை வைத்துதான் ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டும் என்பதில்லை. கத்தியின்றி ரத்தமின்றி ஆடை மாற்றம், உணவுமாற்றம் என்று கலாச்சரத்தை சிதைச்சாலே போதும்... ஒரு நாடு நாசமாகப் போய்விடும். உங்களுக்கு எதிரி யாரென்றே தெரியாது. யாரை எதிர்த்துப் போராடுவீர்கள். அமெரிக்காவுடன் அணுசக்தி ஓப்பந்தம் மட்டும் போட்டுவிட்டால், அதோட முடிந்து போகும் உங்க ஆட்டம்!'

-இப்பிடி அதிர்ச்சிக் குண்டை அடியேன் தூக்கிப் போடலீங்க, ரம்சே கிளார்க்னு சொல்லப்படுற அமெரிக்க வக்கீல்தான் சொல்லியிருக்காராம். இவரு சாதாரணப் பட்ட ஆள் இல்லீங்களாம். மோனிகா லெவன்ஸ்கிகிட்ட, தன்னோட கில்லாடி வேலைகளைக் காட்டின அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனையே உலுக்கி எடுத்து, மன்னிப்பு கேட்க வெச்ச மனித உரிமை வக்கீலாம். 'பாம்பறியும் பாம்பின் கால்'ங்கற மாதிரி சொந்த நாட்டோட குணாதியங்களைப் பத்தி இப்படி புட்டுப்புட்டு வெச்சிருக்காரு போல. ஆனா, உங்களுக்கு மட்டும் 'எஜமான விசுவாசம்' விட்டுப் போகலீங்க.

அய்யா, உங்க பதவி போனா, பொருளாதார நிபுணரா உலக வங்கில போய் உக்காந்துக்குவீங்க. நாங்க எங்கீங்க போவோம்?

இப்ப நிலம் ரசாயன உரத்துக்கு அடிமையாகிப் போச்சுங்க. அடுத்தாப்புல அமெரிக்க லாகிரி வஸ்துகளையும் சூதாட்ட கலாசாரத்தையும் வரவழைச்சிக்கிட்டிருக்கீங்க. இப்படியே போனா சீக்கிரமே பாரதம் பட்டுப் போயிடுமுங்க. வேணாமுங்கய்யா... விட்டுட்டுங்க. நாங்க பிழைச்சுப் போறோம்!

இப்படிக்கு
கோவணாண்டி

Sunday, December 23, 2007

மரணப் படுகுழியில் தள்ளும் தடுப்பூசிகள்

நன்றி ஹெல்த் வார இதழ்.


போதை ஊசிகளுக்கு பீதி அடையலாம். ஆனால், பாதுகாப்பு எனப்படும் தடுப்பு ஊசிகளுக்கு பயப்படவேண்டுமா என்றால், இன்றைய சூழ்நிலையில் பயந்துதான் ஆக வேண்டும். அந்த அளவிற்கு, தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம்.

அறிவியல் வளர்ச்சியின் உச்சகட்டத்தில், நோய்த் தடுப்பு என்னும் வாசகங்களை முன்னிறுத்தி, முன்பெல்லாம் இல்லாமல் இருந்த தடுப்பூசிகளை ஆய்வுகள் மற்றும் விளக்கங்கள் ஏதுமின்றி, பொதுமக்கள் மீது வலியத் திணிப்பது சரியான ஒன்றுதானா என்றால், ‘இல்லை’ என்பதுதான் அழுத்தமான ஆணித்தரமான உண்மை.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்வதால் நோய்த்தடுப்பு_பாதுகாப்பு என சாதகமாகவே கேள்விப்பட்ட உங்களுக்கு, அதில் பாதிப்புகளும் இருக்கிறது என்று கூறும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கக்கூடும். ஆனால், அதுதான் உண்மை. எப்படி? ஏன்? என்றெல்லாம் தடுப்பூசியின் சாதக பாதங்களை அறிந்தபின் நீங்கள் எடுக்கும் முடிவுதான் சரியானதொன்று.

அதற்கு என்ன ஆதாரம்?

முத்தடுப்பு (DPT) எனப்படும் தடுப்பூசியில் தொண்டை அடைப்பான் (Diptheria), கக்குவான் இருமல் (Pertussis), இரணஜன்னி (Tetanus) ஆகிய மூன்று தடுப்பு மருந்துகள் உள்ளன.

இந்த DPT தடுப்பூசியால் ஏற்படும் பின் விளைவுகள் 1750 பேரில் ஒருவருக்கு ஏற்படுத்தும். ஆனால் கக்குவானால் ஏற்படும் உயிரிழப்பு ஒரு வருடத்தில் பல மில்லியன்களில் ஒருவரே.

ஆக விஷயம் இப்படி இருக்க தடுப்பூசிகள் தேவைதானா? எனும் கேள்வி எழுவது இயற்கையே...

கக்குவானைப் பொறுத்தமட்டில் வியாதியால் ஏற்படும் இறப்பைக்காட்டிலும், தடுப்பூசிகளினால் ஏற்படும் இறப்புகள் 100 மடங்கு அதிகம்.

கணக்குப்படியே கக்குவானால் ஒரு வருடத்திற்கு ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10_க்கும் குறைவே. 1993_ம் ஆண்டு 8 பேர் தான் கக்குவானால் இறந்துள்ளனர் என்று CDC (Centre for Disease Control) அறிவித்துள்ளது.

கக்குவானால் ஏற்படும் இறப்பு விகிதம் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே 79% குறைந்துள்ளது.

இத்தடுப்பூசிகளின் காரணமாக பல குழந்தைகள் Sudden Infant Death Syndrome (SIDS) எனும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. ஒரு வருடத்திற்கு 5 லிருந்து 10,000 குழந்தைகள் இந்நோயால்இறப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவிலே 10 சதவீதம் தடுப்பூசி பின்விளைவுகள் தான் பதிவு செய்யப்படுகின்றன. (FDA இயக்குநர் Dr.David Pressler) மீதி 90 சதவீதம் பதிவு செய்யப்படுவதில்லை எனில் இந்திய நிலைமையை விளக்கத் தேவையில்லை.

தமிழ் நாட்டிலும் தேவாதூர் கிராமம், மதுராந்தகம், கனகவல்லி வேதகிரி தம்பதியின் 18 மாத ஆண் குழந்தை முத்தடுப்பு ஊசியின் காரணமாக சில வருடங்களுக்கு முன் இறந்துள்ளது. ஆனால், அது மூளைக் காய்ச்சலால் இறந்துள்ளது என தவறாக சித்திரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன் 'The Hindu' நாளிதழில் வெளிவந்த செய்தி அதிர்ச்சியூட்டியது. அயர்லாந்திலும், இங்கிலாந்திலும் கக்குவான் தடுப்பூசி, சோதனையாக பயன்படுத்தப்பட்டு (Guineapig kids, BBC Radio 4) பல குழந்தைகளின் மூளை நிரந்தரமாக பாதிக்கப்பட்டதால், இது குறித்தான விசாரணை நடத்த இரு நாட்டு அரசுகளும் முன் வந்தது செய்தியாக உள்ளது.

தடுப்பூசி கொடுக்கப்பட்டால் அது உடலில் ஆன்டிபாடி (Antibody) என்னும் புரதத்தை உண்டாக்கச் செய்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அப்புரதத்தின் விளைவாக பாதுகாப்பு கிடைக்கிறதா? என்பதில்தான் கேள்வி எழுந்துள்ளது. 1950_ல் பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் (British Medical Counsel) தொண்டை அடைப்பான் குறித்து செய்த ஆய்வில் புரதத்தின் ஆன்டிபாடி (Antibody) அளவிற்கும், பாதுகாப்பிற்கும் தொடர்பு ஏதும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது புரதம் குறைவாக இருந்தும் பாதுகாப்பு இருந்ததும், புரதம் அதிகமாக இருந்த போதிலும் நோயால் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

(வட ஆஸ்திரேலியாவில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் குழந்தைகள் இறப்பு விகிதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் ஒரு வித தடுப்பூசி பொருந்தும் என்பது பொய் என நிரூபிப்பதாகவே இது உள்ளது. அந்தந்த இன மக்களின் உணவு, தட்ப வெப்பநிலை, சூழல், கலாச்சார வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் தேவையை இது உணர்த்துவதாக உள்ளது.)

ஜெர்மனி

ஆண்டு 1940 1945

தொண்டை 40,000 பேர் 2,50,000 பேர்

அடைப்பான்

பாதிப்பு

குறிப்பு: தடுப்பூசி தொடங்கப்பட்ட ஆண்டு

தடுப்பூசி கொடுத்து 5 ஆண்டுகள் நிறைவு

(Don’t get stuckHannah Allen) (Vaccination Debate)

இங்கிலாந்தில் 1970_லிருந்து 1990_வரை இடைப்பட்ட காலத்தில் 2,00,000 பேர் முழுவதுமாக தடுப்பூசி கொடுக்கப்பட்டும் கக்குவானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹிரி வின் Community Disease surveillance centre, அறிவித்துள்ளது.

1979_ம் ஆண்டு ஸ்வீடன் நாடு கக்குவான் தடுப்பூசியின் திறன் மிகக் குறைவானது என உணர்ந்து அத்தடுப்பூசியை கைவிட்டது அதற்கு காரணம் 1978_ம் ஆண்டு கக்குவான் பாதிக்கப்பட்ட 5140 பேர்களில் 84 சதவீதம் பேர் அதற்கான முழுத்தடுப்பூசிகளும் போடப்பட்டிருந்தனர் என்பதுதான்.

(British Medical Journal 283 : 6966971981).

அமெரிக்காவில் ஒரு முத்தடுப்பு ஊசியின் விலை 1982ல் 11 சென்ட் என இருந்தது. 1987ல் 11.40 டாலராக விலை ஏற்றம் செய்யப்பட்டது. தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தடுப்பூசியின் பின் விளைவுகளாக வரும் இறப்பு, மூளை பாதிப்பு உள்ளவர்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்காக ஒரு ஊசிக்கு 8 டாலர் வாங்கியதன் விளைவாகவே இந்த விலையேற்றம்.

(The Vine, Issue 7, January 1994, Nambour, Qld)


1994ல் ஜூலையில் வெளிவந்த New England Journal of Medicine - ல் கக்குவானால் பாதிக்கப்பட்ட 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 80 சதவீதம் அதற்காக முழுத் தடுப்பூசிகளும் போடப்பட்டிருந்தனர்.

இங்கிலாந்தில் சமீபமாக 30,000 பேர் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். (இவர்கள் அனைவரும் அதற்கான முழுத்தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டிருந்தனர்.) கலிஃபோர்னியா பல்கலை செய்த ஆய்வில் முத்தடுப்பு ஊசியின் காரணமாக ஓராண்டிற்கு 1000 குழந்தைகள் SIDS நோயால் இறக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. டாக்டர் ராபர்ட் மெண்டல்சன் (Dr. Robert Mendelsohn) எனும் குழந்தைகள் சிறப்பு நிபுணர் அமெரிக்காவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 10,000 குழந்தைகள் தடுப்பூசிகளின் காரணமாக, SIDS நோயால் இறக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

1986_ல் டாக்டர் மைக்கேல் வைனர் பி.எச்.டி. (Dr. Michael Weiner Ph:D) என்பவர் 1981_ல் இருந்து ஒவ்வொரு வருடமும் எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் தடுப்பூசிகளின் காரணமாக SIDS சைட்ஸ் (Sudden Infant Death Syndrome) வியாதியால் பலர் மடிகின்றனர் என இருந்தும், முத்தடுப்பு ஊசியால் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளை மேலும் ஆராய குறைந்த அளவு பணம் கூட ஒதுக்கப்படவில்லை என வேதனையுடன் கூறுகிறார்.

1995_ல் அமெரிக்க அழகி மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற ஹீதர் ஒய்ட் ஸ்பேன் என்பவர் முத்தடுப்பு (DPT) ஊசியின் காரணமாக காது கேளாமைக்கு (Hearing Loss) ஆளானார் என்பது செய்தியாக உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உலக சுகாதார மையம் பரிந்துரைத்த ஜிஜி இரணஜன்னி தடுப்பூசிகள் கருக்கலைப்பு, இரத்தப்போக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் HCG(Human Chorionic Gonodotrophin) எனும் மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததால், அத்திட்டத்தை பிலிப்பைன்ஸ் அரசு கைவிட்டுள்ளது. மேலும் சமீபத்திய 10 வருட ஆய்வில் ஜிஜி தடுப்பூசி கொடுக்கப்படாமல் இருந்தும் 1000_க்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என தெரியவந்துள்ளது.

அம்மை தடுப்பூசிகள்

(Measles தடுப்பூசி /Measles Mumps, Rubella, (MMR) தடுப்பூசிகள்.

பல மருத்துவ ஆய்வுகளில் தடுப்பூசிகளால் பலன் ஏதும் இல்லை என்பதும், அதனால் கிடைக்கும் ‘பாதுகாப்பு’ என்பது ஒரு வித மாயை தான் என்பதும் தெளிவான ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது. தடுப்பூசி முழுவதுமாகக் கொடுக்கப்பட்ட குழந்தைகளையும் (Measles) அம்மை நோய் தாக்கியுள்ளது என்பதையும் (Centre for Disease control) CDC தெளிவாகச் சொல்லியிருக்கிறது. 1989_ம் ஆண்டில் CDC யானது 98 சதவீதம் அம்மை தடுப்பூசி கொடுக்கப்பட்ட அமெரிக்க பள்ளிக் குழந்தைகளை அம்மைநோய் தாக்கியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் எல்லா இடங்களிலும் இதுவரை அம்மை பாதிப்பு பல வருடங்களாக இல்லாத இடங்களிலும் கூட அமெரிக்காவில் அந்நோய் பாதிப்பு தென்பட்டது என்பது தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.

CD தடுப்பூசி கொடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோரை அம்மை தாக்கியதால், அத்தாக்குதலுக்கு தடுப்பூசியே காரணமாகவும் இருக்கக் கூடும் என கருத்து வெளியிட்டுள்ளது.

அம்மை இறப்பு விகிதம் அம்மை தடுப்பூசி அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே, சுற்றுப்புற சுத்தம், சுகாதாரம், நல்ல உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பிற அடிப்படை வசதிகள் கிடைத்ததன் விளைவாக 97 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அம்மை நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கு தோல்வியாதிகள் எலும்பு முட்டுகளை பாதிக்கும் நாள்பட்ட வியாதிகள், சில வகை புற்றுநோய்கள் (Ovarian Cancer) அதிகம் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக நோயால் பாதிக்கப்படும்போது தான் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதாக புரிந்து கொள்ள வேண்டும்.

1967_ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் கானா (Ghana) நாட்டு மக்கள் தொகையில் 96 சதவீதம் பேருக்கு அம்மை தடுப்பூசி போடப்பட்டதன் விளைவாக, அந்நாட்டை அம்மை (Measles) நோய் இனி தாக்காது என அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பை தவிடுபொடியாக்கியது. 1972ல் கானாவில் அம்மை நோய் கொள்ளை நோயாக உருவெடுத்து அதுவரை கண்டிராத அளவிற்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாம்.

(Dr.H. Albonico, MMR Vaccine Campaign in Switzerland, March 1990)

1978_ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள 30 மாநிலங்களில் செய்த பெரும் ஆய்வில், அம்மை தடுப்பூசி முழுவதுமாக கொடுக்கப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் அதிகமானோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டது டாக்டர். மெண்டல்சன் குழந்தை சிறப்பு நிபுணரால் (The People’s Doctor) தெரிய வந்துள்ளது.

1981, பிப்ரவரியில் வெளிவந்த The Journal of the American Medical Associates கட்டுரையில் 90 சதவீதம் குழந்தை பிறப்பு நிபுணர்களும் (obstetricians) 66 சதவீதம் குழந்தை சிறப்பு நிபுணர்களும் (Paediatricians) Rubella தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டனர் என்பதைச் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

1990_ல் The Journal of American Medical Association வெளியிட்ட கட்டுரையில் அமெரிக்காவில் 95 சதவீதம் பள்ளிக் குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி கொடுக்கப்பட்ட போதிலும், அம்மை நோய் தாக்கம் தொடர்ந்து கொள்ளை நோயாக பாதிப்பை ஏற்படுத்தியதையும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் அதன் பாதிப்புக்கு அதிகம் உள்ளானார்கள் என்பதையும் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

(JAMA 21/11/90)

இங்கிலாந்தில் 4 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்ட ஓர் ஆய்வில் அம்மை தடுப்பூசி போடப்பட்ட 66% சதவீத குழந்தைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

1986_ல் அமெரிக்கா Corpus

Christ(Texas) எனுமிடத்தில் அம்மை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 99% சதவீதம் பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டனர்.

Rubella தடுப்பூசி போடப்பட்ட 26 சதவீதம் குழந்தைகள் மூட்டுவலி/பாதிப்பிற்கு ஆளானார்கள் (US Science Magazine).

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்ட பல வருட தடுப்பூசி ஆய்வுகளில், அதன் பாதுகாப்பு திறன் 80_93 பேருக்கு சதவீதம் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Dr.Glen Dettman என்பவர் ஆமைவாதத்தால் (Rheumatoid Arthritis) பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 1/3 மூட்டுகளில் Rubella Virus இருப்பதை நிரூபித்து அதற்குக் காரணம் அந்த வைரஸ்/தடுப்பூசி தான் என கண்டுபிடித்துள்ளார்.

The Lancet எனும் பத்திரிக்கையானது, மேற்கு ஜெர்மனியில் மருத்துவர்கள் Mumps தடுப்பூசியால் ஏற்படும் வலிப்பு நோய் (Seizures) மூளைக்காய்ச்சல் (Meningitis) உட்பட 27 வகை பிரச்னைகளைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளனர் என்பதை செய்தியாக வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில், வருடம் ஒன்றுக்கு 30,000 பேர் புதிதாக வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும், அவர்களில் 10,000 பேர் அம்மை தடுப்பூசி போடப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. British Medical Journals ல் (322 / 7288 / 693 / A) இந்திய விஞ்ஞானிகள் அம்மை தடுப்பூசி பயன்படுத்தியதன் விளைவாக இந்திய மக்கள் அம்மை கிருமி போன்ற வைரஸ் கிருமி (Measles like virus) தாக்கி மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளனர்.

1989 _ 91_ம் இடைப்பட்ட காலத்தில் தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த Kaiser Permaneute, Centre for Disease Control (CDC) இணைந்து தாய் தந்தையருக்கு முறையாக விளக்கங்கள் அளிக்கப்படாமல், யூகோஸ்லாவியாவில் தயாரிக்கப்பட்ட High Titre Edmonston Zagreb என்னும் அம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு (1500 பேர் இவர்களில் பெரும்பாலோர், கருப்பினர் (Blacks) லத்தின (Latino) குழந்தைகள்) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரையில் கொடுக்கப்பட்டதன் விளைவாக பலர் இறந்தும் / மோசமான பாதிப்புக்கு உள்ளாகியும் உள்ளனர். இதே தடுப்பூசி மெக்சிக்கோ, ஹைட்டி, ஆப்ரிக்காவில் ஆய்வு செய்ததன் விளைவாக பல குழந்தைகள் இறந்துள்ளனர். இதனால் இத்தடுப்பூசி பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

(Dr. Alan Cantwell M.D)

பல இந்திய ஆய்வுகளில் அம்மை தடுப்பூசிகளால் ஏற்படும் பாதிப்புகள் நிரூபணம் ஆகியுள்ளது. (Sood, Kumar, Singh etal), (Sokhzy, 1991)


எனது மருத்துவமனையில் கூட சமீபமாக கொல்கத்தா நகரைச் சேர்ந்த தம்பதியினரின் 1 வயது 3 மாதக் குழந்தைக்கு அம்மை தடுப்பூசி போட்டபின், அம்மை பாதிப்பு ஏற்பட்டதை நான் பதிவு செய்துள்ளேன்.

சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அம்மைத் தடுப்பூசி போட்டால் அதனால் தூண்டப்படும் புரதத்தின் ஆன்டிபயாடிக் அளவு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. (British Medical Journal 1975, ii 583 585 Chandra R.K.) ஆக எந்த தடுப்பூசி போடு முன்னரும் தனது உரிமையை கருத்தில் கொண்டு அதன் சாதக / பாதகங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அத்தியாவசமானது. அது போடவில்லை எனில் வியாதியால் பாதிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என இருக்கும் பட்சத்தில், மாற்று எளிதான பிறவழிகள் இல்லையெனும் சமயத்திலும் மட்டுமே தடுப்பூசிகளை பயன்படுத்துவது நல்லது. தடுப்பூசி பாதுகாப்புத்திறனும், தற்காலிகமானது. அனைவருக்கும் சத்தான உணவு, சுத்தமான குடிநீர் சுத்தமான சூழல், சுற்றுப்புற சுகாதாரம் அடிப்படை வசதிகள் இருக்க இடம், உடுக்க உடை நிரந்தர வேலை மூலம் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கச் செய்தலே நோய் வராமல் பாதுகாப்பு நிரந்தரம் நோக்கிய பாதையாக இருக்கும். அதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தலே தடுப்பூசிகளிலிருந்து தப்பும் வழியாக அமையும். இல்லை எனில் உங்களின் மரணத்திற்கு தடுப்பூசிகளும் காரணம் என்கிற உண்மையும் உங்களோடு புதைகுழியில் மூடப்பட்டு விடும்.

Wednesday, December 19, 2007

அணு சக்தி ஒப்பந்தம் - இன்றைய நிலை

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முடிவில் காங்கிரஸ் உறுப்பினர்களை சோனியா காந்தி அழைத்தார். ‘அனைவரும் தொகுதிக்குச் செல்லுங்கள்’ என்று அறிவுறுத்தினார். இதன் பொருள் என்ன? இப்போதைய நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்று அர்த்தம்.

பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி.யும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி என்று அறிவித்திருக்கிறது. அவர் பாலைவனத்தில் பூத்த மலர் என்று சிவசேனா வரவேற்றிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ்குமாரும் அதனை வழிமொழிந்திருக்கிறார்.

ஆமாம். இன்றைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டிற்கு மேல் இருக்கிறது. இப்போது தேர்தல் திணிக்கப்படுவதற்கு யார் காரணம்? இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்தான்.

வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகளின் தோள்களில் அவருடைய அரசு அமர்ந்திருக்கிறது. அவருடைய அரசு ஒரு குறைந்தபட்ச செல்ல திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம்தான் அரசின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டி.

வெளியுறவுத் துறையைப் பொறுத்தவரையில் பண்டுதொட்டு நாம் பயணிக்கும் நடுநிலைக் கொள்கை வழித்தடத்தில்தான் நடைபோட வேண்டும் என்று அந்தத் திட்டம் தெளிவாகத் தெரிவிக்கிறது. அந்தப் பாதை நமக்கும் உலகிற்கும் பண்டிட் ஜவஹர்லால் நேரு வகுத்துத் தந்த ஒளிமயமான சாலையாகும்.

ஆனால், மன்மோகன் சிங் அரசு ஆரம்பம் முதலே தடம் புரண்டது. 2005_ம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்றார். அவரும் அதிபர் புஷ்ஷ§ம் மந்திராலோசனை நடத்தினர். மர்ம ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்தம் தான் இப்போது விவாதத்தில் வெந்து கொண்டிருக்கும் அணுசக்தி உடன்பாட்டின் முதல் கட்டமாகும்.

அன்றைக்கே அந்த உடன்பாட்டை நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மன்மோகன் சிங் தெரிவிக்கவில்லை. அந்த உடன்பாட்டின் அடுத்தகட்டப் பிரச்னை மீது அமெரிக்காவிலேயே விவாதங்கள் எழுந்தன. அதன் பின்னர்தான் இந்தியா விழித்துக் கொண்டது.

அந்த உடன்பாட்டை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று இதற்கு முன்னரே இடதுசாரிக் கட்சிகள் கோரின. மன்மோகன் சிங் அவைக்கு வந்தார். பிரதமருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரே ஒரு விளக்கத்தைப் படித்தார். விவாதம் நடைபெறவில்லை.

அதனால் இடதுசாரிக் கட்சிகளுக்கு சந்தேகங்கள் எழுந்தன. ‘மன்மோகன் சிங் அரசிற்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம்’ என்றன. ‘அப்படித் திரும்பப் பெற்றால் கவலையில்லை’ என்று ஆவேசம் கொண்டார் மன்மோகன் சிங்.

ஆனால், அடுத்த சில தினங்களில் ‘இந்தப் பிரச்னைக்காக இடதுசாரிக் கட்சிகளின் உறவை இழக்க விரும்பவில்லை’ என்றார் சோனியா.

இடி விழுந்தது போல் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. ‘எப்படியாவது அணுசக்தி உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று நிதிஅமைச்சர் வந்தார். முன்னாள் அமெரிக்க அமைச்சர் கிசிங்கர் வந்தார். இந்திய வம்சாவளித் தொழிலதிபர்கள் வந்தனர். காரணம், இந்த ஒப்பந்தம் எல்லா வகையிலும் அமெரிக்காவிற்குச் சாதகம் என்பதனை ஏற்கெனவே வெளியுறவு துணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

சுருங்கச் சொன்னால், இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்கும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இறுதி மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பால் வார்த்தது போல் இருக்கும்.

அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பின்னர், சோனியா காந்தியே தனது நிலையை மாற்றிக் கொண்டார். ‘இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இது தேவை’ என்றார்.

சோனியாவும் பங்கு கொண்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உடன்பாட்டின் அபாயத்தை மார்க்சிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் எடுத்துக் கூறினார். அதன் பின்னர் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘உடன்பாட்டை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்’ என்றார்.

‘உடன்பாட்டில் சில மாறுதல்கள் தேவை’ என்று நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டலீசாரைசைக் கோரினார். இனி உடன்பாட்டைப் பரிசீலிக்க இயலாது என்று அந்த அம்மையார் தெரிவித்தார்.

இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பற்றி விவாதம் நடந்தது. நாடாளுமன்றத்தில் ஏழு மணி நேரம் நடந்த விவாதத்தில் மன்மோகன் சிங் அரசு தனிமைப்பட்டது. ‘அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தேவையில்லை’ என்று பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள், ஆவேசக் குரல் எழுப்பினார்கள். இடதுசாரிக் கட்சிகளும் பி.ஜே.பி.யும் இணைந்து நின்றன.

விவாதத்தின்போது ஒரே ஒரு முறைதான் பிரதமர் மன்மோகன் சிங் எழுந்தார். ‘நாம் அணுகுண்டு சோதனை செய்வதை அமெரிக்க ஒப்பந்தம் தடை செய்யவில்லை’ என்றார்.

விவாதத்திற்கு வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் பதில் அளித்தார். ‘இடதுசாரிக் கட்சிகள் எழுப்பிய ஐயப்பாடுகளுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. உடன்பாடு பற்றிய ஒவ்வொரு கட்டப் பேச்சின் முடிவை மன்றத்திற்குத் தெரிவிப்போம்’ என்றார். இதன் பொருள் என்ன? இந்தியாவில் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவோம் என்பதுதானே?

குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் என்ன சொன்னார்? ‘அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை மக்கள் அமோகமாக வரவேற்கிறார்களாம். ஆகவே, அதனைச் செயல்படுத்துவோம்’ என்றார்.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்திருந்தால் அமெரிக்க அணுசக்தி உடன்பாடு குப்பைக் கூடைக்குப் போய் இருக்கும். இந்த நிலையில், எந்த மக்கள் இந்த உடன்பாட்டை வரவேற்கிறார்கள் என்பதனை மன்மோகன் சிங் தெளிவுபடுத்தியிருக்கலாம். இந்த உடன்பாட்டை அமெரிக்க மக்கள்கூட வரவேற்கவில்லை. அமெரிக்கத் தொழிலதிபர்கள் வரவேற்கிறார்கள். காரணம், அணு உலைகளை உற்பத்தி செய்யும் அந்த நாட்டு ஆலைகளுக்கு கடந்த இருபது ஆண்டுகளாக வேலையில்லை.

அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்ட பின்னர், பின்வாங்கும் நிலையில்தான் மன்மோகன் சிங் இருந்தார். ‘இந்த உடன்பாட்டோடு வாழ்க்கை முடிந்துவிடப்போவதில்லை. பொது வாழ்வில்

ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஏட்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவர் நைஜீரியா சென்றார். அங்கிருந்து அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம் பேசினார். திரும்பி வந்தார். கதை திசை திரும்பியது. ‘உடன்பாட்டை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. அதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்களும் எதிர்க்கலாமா?’ என்று அவர் சரத்பவாரிடம் மன்றாடினார். லாலுவிடமும் கெஞ்சினார். அவற்றையெல்லாம் கடந்து வாஜ்பாயை, அத்வானியைச் சந்தித்தார். ‘இந்த உடன்பாட்டிற்கு நீங்கள்தானே பிள்ளையார்சுழி போட்டீர்கள். அந்த உடன்பாட்டைத்தானே செயல்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.

ஒரு நாட்டின் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களை வீடு தேடிச் சென்று சந்தித்து இப்படி ஆதரவு திரட்ட வேண்டுமா? அதற்குக் காரணம் அமெரிக்க நிர்ப்பந்தம் தான்.

நாடு ஏற்றுக்கொண்ட நடுநிலைக் கொள்கையிலிருந்து நழுவுகிறீர்களே என்றால், தத்துவங்களை மாற்றிக் கொள்ள தைரியம் வேண்டும் என்கிறார் மன்மோகன் சிங். சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்கிறார் சிதம்பரம். ஆமாம். கற்பை ஒதுக்கி வைத்துவிட்டு கண்ணகிக்கு சிலை எடுப்போம் என்கிறார்கள்.

புத்தாண்டு பிறந்ததும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம். பி.ஜே.பி. தமது பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டது. அப்படி காங்கிரஸ் கட்சி யாரை அறிவிக்கப் போகிறது? மன்மோகன் சிங்கையா?

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்குமா?

அப்படி ஒரு நிலை வந்தால், தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் ஒரு நிலை எடுக்க வேண்டியிருக்கும். அதனைத் தவிர்ப்பதற்கு தமிழக முதல்வர், என்ன செய்யப் போகிறார்?

Monday, December 17, 2007

மருந்து விலையில் கொள்ளை

பணம் விழுங்கும் மாத்திரைகள்..!



''ஒருவர், ஒரு பேனாவை ஐந்து ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு விற்றால் அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..?”

''ஆறு மாதம் சிறைத் தண்டனை!''

- சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு, ரஷ்யா சென்றிருந்தபோது ஒரு பள்ளி மாணவனிடம் அவர் கேட்ட கேள்வியும், மாணவன் சொன்ன பதிலும்தான் மேலே நீங்கள் படித்தது. அநியாய வியாபாரம் தவறு என்பதை ‘பளிச்’ என்று உணர்த்தும் எளிய உதாரணம் இது!

கழுதைக்கு பெயின்ட் அடித்து குதிரை என்று விற்கும் வில்லங்க வர்த்தகர்களுக்கு இப்போதும், எப்போதும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் உயிர்காக்கும் மருந்துப் பொருட்களை விற்பவர்கள் மத்தியிலும் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்!

இந்திய மருந்துப் பொருட்களின் சந்தையில், ஒரு மருந்தின் உற்பத்தி விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் தலை தட்டாமாலை சுற்றிவிடும். ஒரு ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்படும் மருந்தை பத்து ரூபாய்க்கு விற்றால் அதற்குப் பெயர் பகல் கொள்ளையில்லையா..?

வருடத்துக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் புழங்கும் இந்திய பார்மா மார்க்கெட்டில் எல்லா மருந்துகளுக்கும் அரசு, அதிகபட்ச விற்பனை விலையை (எம்.ஆர்.பி.) நிர்ணயிக்கவில்லை. மொத்த சந்தை மதிப்பில் நான்கில் ஒரு பகுதி மருந்துகளுக்கு மட்டுமே அரசால் எம்.ஆர்.பி. நிர்ணயிக்கப்படுகிறது. மற்ற அனைத்து மருந்துகளும் இஷ்டம் போல விற்கப்படுகிறது. இந்தப் புள்ளியில்தான் லாபநோக்குடன் செயல்படுபவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.



அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ‘இந்திய மருந்துப்பொருட்கள் விலை நிர்ணய ஆணையம்’ (ழிணீtவீஷீஸீணீறீ றிலீணீக்ஷீனீணீநீமீutவீநீணீறீ றிக்ஷீவீநீவீஸீரீ கிutலீஷீக்ஷீவீtஹ்), அனைத்து-வகை மருந்துப் பொருட்களுக்கும் அதிக-பட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கப் போவ-தாக பேச்சுக் கிளம்பியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இதற்கான உத்தரவு வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

சுற்றுச்-சூழலுக்கான மருத்துவர்கள் குழு (ஞிளிஷிணி) வின் உறுப்பினரான சென்னை, கல்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி மிகுந்த ஆதங்கத்துடன் நம்மிடம் பல விஷயங்களை விவரித்தார்.

''விதவிதமான நோய்கள் பெருகிவிட்டன. சிறியதோ, பெரியதோ... கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் ஒரு நோயாளி இருக்கிறார். தினமும் மருந்து உட்கொள்ளும் அளவுக்கு தீவிரமான நோயாளிகள் யாரும் இல்லை என்றாலும், அவ்வப்போது ஏற்-படும் சின்னச் சின்ன உடல்நலக் குறைவு-களுக்குச் செலவழிப்பதற்கு, ஒரு குடும்பத்-துக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது தேவைப்படுகிறது. உண்மையில் அந்த மருந்துப் பொருட்களின் விலை நூறு ரூபாயைக் கூடத் தாண்டாது. இது அதிர்ச்சி-யளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை!'' என்றவர், சில உதாரணங்களை அடுக்கினார்.

''சளி பிரச்னையைச் சரி பண்ணக்கூடிய செ ப்ட்ரியோக்ஸின் (சிமீயீtக்ஷீவீணீஜ்ஷீஸீமீ 1ரீ) என்ற ஆன்டிபயாட்டிக் ஊசி, எங்களை மாதிரியான மருத்துவர்களுக்கும், சில்லறை விற்பனை செய்யும் மெடிக்கல் ஷாப்களுக்கும் 21 ரூபாய்க்கு வருகிறது. இதன் எம்.ஆர்.பி. 100 ரூபாய்க்கும் அதிகம். கிட்டத்தட்ட 500 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபம் வருகிறது. இன்னொரு ஆண்டிபயாட்டிக் ஊசியான அமிகாசின் (கினீவீளீணீநீவீஸீ 500னீரீ) எங்களுக்குக் கொடுக்கப்படும் விலை 10 ரூபாய். ஆனால், இதன் எம்.ஆர்.பி. 50 ரூபாய்க்கும் மேல், அதாவது 500%&க்கும் அதிகமான லாபம்! இப்படி பெரும்பாலான மருந்துப் பொருட்கள் மிக, மிக அதிகமான விலை வைத்துதான் விற்கப்படுகிறது. இவற்றின் உற்பத்திச் செலவோடு விற்பனை விலையை ஒப்பிட்டால், லாபத்தின் சதவிகிதம் இன்னும் பல மடங்கு கூடும். சில மருந்துப் பொருட்கள், அதன் உற்பத்தி விலையைக் காட்டிலும் 3000% கூட அதிக விலை வைத்து விற்கப்படுகின்றன'' என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகக் கொடுத்தார்.

''இதையெல்லாம் யாரும் கண்காணிக்க முடியாதா..?'' என்று கேட்டதும் தொடர்ந்தார் டாக்டர் புகழேந்தி.

''இந்திய மருந்துச் சந்தையை, அரசின் கட்டுப்-பாட்டுக்குள் இருக்கும் மருந்து வகைகள், அரசின் கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்து வகைகள் (சிஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ & ஹிஸீநீஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ ஞிக்ஷீuரீs), உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவரின் பரிந்துரையோடு/பரிந்துரை-யின்றி கொடுக்கக்கூடிய மருந்துகள்.. என்று பல வகைகளாகப் பிரிக்கலாம். இதில் தன் கட்டுப்-பாட்டுக்குள் வரும் மருந்துகள் மற்-றும் உயிர்காக்கும் மருந்துகளின் விற்-பனை விலையை மட்டும்தான் அரசு நிர்ணயிக்கிறது.

ஆனால், சில வருடங்-களுக்கு முன்புவரை 200 ஆக இருந்த அந்த உயிர்காக்கும் மருந்துகளின் எண்-ணிக்கை, இன்று வெறும் 20 ஆகக் குறைந்துவிட்டது. விற்பனை விலையை அரசே நிர்ணயிப்பதால் லாபம் குறைவு என்று கருதி, சில மருந்து கம்பெனிகள் பட்டியலில் இருந்தே மருந்துகளைத் தூக்கிவிட்டன. மீதியுள்ள முக்கால்வாசி மருந்துப் பொருட்களின் விற்பனை விலையை அந்தந்த கம்பெனிகளே நிர்ணயித்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அந்தத் தயாரிப்புகள்தான் ஏராளமாகச் சந்தையில் கிடைக்கின்றன'' என்றார்.

‘ஒரு பொருளைத் தயாரிப்பவரைக் காட்டிலும் அதை விற்பவருக்கு லாபம் அதிகம்’ என்பது விவசாயத் துறையைவிட மருந்துப் பொருட்களின் துறைக்கே அதிகம் பொருந்தும். மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவுக்கு லாபம் வைத்து மொத்த விற்பனையாளர்களுக்கு விற்கின்றன. அவர்களிடமிருந்து சில்லறை விற்பனையாளர்கள் வழியாக மக்களுக்குப் போகிறது. இதில் சில்லறை விற்பனை செய்யும் இடத்தில்தான் அதிக லாபம் பார்க்கிறார்கள்.

அண்மையில் இந்திய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் (ழிறிறிகி) நாடு முழுக்க பன்னிரண்டு நகரங்களில் ஓர் ஆய்வு நடத்தியது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 547 மருந்துகளில் 303 மருந்துப் பொருட்களின் விலை, அவற்றின் உற்பத்திச் செலவைவிட பலநூறு மடங்கு அதிக விலை வைத்து விற்கப்பட்டதும், 80 மருந்துகளுக்கு அரசின் அனுமதி இல்லாமலேயே அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் மருந்துப் பொருட்களின் விலை இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.

டாக்டர் புகழேந்தியுடன் பேசியபோது அவர் சொன்ன இன்னொரு விஷயம் மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது!

''இப்படி தாறுமாறாக எம்.ஆர்.பி. நிர்ணயிக்கப்படுவது இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும் மருந்துகளுக்கு மட்டும்தான். இதுவே வெளிநாட்டு மருந்துகள் என்றால் சில்லறை விற்பனையாளர்களுக்கு குறைந்த அளவு அதாவது நியாயமான அளவுக்கே மார்ஜின் நிர்ணயிக்கிறார்கள். உதாரணத்துக்கு, புகழ்பெற்ற நோவால்டீஸ் மருந்து நிறுவனம், சளி பிரச்னைக்கு டெக்ரிடல் (ஞிமீரீக்ஷீவீtணீறீ 200 னீரீ) என்ற மாத்திரையைத் தயாரிக்கிறது. இதன் ஒரு மாத்திரையின் விற்பனை விலை 1.26 ரூபாய். எங்களுக்கு 1.10 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆனால், மெடிக்கல் ஷாப்களில் இப்படியான லாபம் குறைவாகக் கிடைக்கும் மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்வதே இல்லை. எப்போது கேட்டாலும் இல்லை என்ற பதில்தான் வரும். ஒரு மருந்தை தனக்கு லாபம் குறைவு என்ற காரணத்தால் அதை விற்பதையே நிறுத்துவது என்பது எத்தகைய கொடுமை என்று பாருங்கள்.



இதற்கு மருத்துவர்கள் தரப்பிலும் உடந்தையாக இருக்கிறார்கள். விலை குறைவான மருந்தைக் கொடுத் தாலே நோய் சரியாகும் என்ற நிலை இருந்தாலும், எந்த மருந்து கம்பெனி தனக்குச் சலுகை தருகிறதோ, அந்த மருந்தையே நோயாளிக்குப் பரிந்துரை செய்யும் தவறை மருத்துவர்களே செய்வது கொடுமை! லாபமே பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. லாபத்துக்கும், கொள்ளை லாபத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே..?'' என்று ஆதங்கமாகக் கேட்டார் புகழேந்தி.

இந்தியாவில் இப்போது பலவித நோய்களும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறினாலும் கண்ணுக்கு தெரியாமல் பரவிக்கொண்டிருக்கும் ஒரு வியாதி ரத்தசோகை. இந்திய கர்ப்பிணி பெண்களில் 88% பேரும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 80% பேரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அளவுக்கு அதிகமான மக்களைத் தாக்கியிருக்கும் ஒரு வியாதிக்கான மருந்தின் விலை, குறைவாக இருக்க வேண்டும் அல்லது அப்படி குறைவாக விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதன் விலை வருடத்துக்கு வருடம் ஏறிக்கொண்டே இருக்கிறது. மூன்று ஆண்டு-களுக்கு முன்பு 12.50 ரூபாயாக இருந்த ரத்தசோகைக்கான ஊசியின் விலை படிப்-படியாக ஏறி, கடந்த அக்டோபரில் 22 ரூபா-யாக உயர்ந்துவிட்டது.

ஆண்டு ஒன்றுக்கு 8&9% வளர்ச்சி அடைந்து வரும் இந்திய பார்மா மார்க்கெட்டில் 20,000&-க்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் இருக்கின்றன. ஆனாலும் 70% மருந்து விற்பனை, முன்னணியில் இருக்கும் 250 கம்பெனிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

இந்தப் பிரச்னைபற்றி ‘கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆப் இண்டியா’ அமைப்பின் அறங்காவலரான தேசிகனிடம் கேட்டோம். ''உலகத்தின் அதிகபட்ச டயாபடீஸ் நோயாளிகள் இருப்பது இந்தியாவில்தான். எய்ட்ஸ் நோயாளி-களின் எண்ணிக்கையில் நமக்குத்தான் இரண்-டாமிடம். உலக டி.பி. நோயாளி களில் 33% பேர் இந்தியர்கள். வயிற்றுப் போக்குப் பிரச்னையால் ஒவ்வொரு வருடமும் 19 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என இந்தியா நோய்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. இன்னும் ஐந்து ஆண்டு-களில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் டயா-படீஸ் நோயாளிகளாக இருப்பார்கள் என்றும், எய்ட்ஸில் முதலிடத்தை எட்டிவிடுவோம் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, உலக மருந்துச் சந்தையின் டார்லிங்காக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது 35,000 கோடிகளாக இருக்கும் இந்திய மருந்துச் சந்தையின் மதிப்பு இனிமேல் கூடிக் கொண்டேதான் போகும். ஆனால், மருந்துகளின் உண்மை-யான விலையைக் கணக்கில் கொண்டால், இந்த மதிப்பு இப்போது சொல்லப்படுவதில் பாதியளவு கூட இருக்காது. குடும்ப பட்ஜெட்டில் மருந்துக்கும் நிதி ஒதுக்கவேண்டிய இன்றைய காலத்தில், அரசு உடனடியாக மருந்துப் பொருட்களின் விலைக்குக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

இப்போதுள்ள விலை நிர்ணய முறையைத் தவிர்த்து, அனைத்து வகையான மருந்துகளுக்கும் ஒரே விதமான விற்பனை விலை நிர்ணயம் செய்யப்-போவதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி மொத்த விற்பனையாளர்களுக்கு 10% மார்ஜினும், சில-லறை விற்பனையாளர்களுக்கு 20% மார்ஜினும் நிர்ணயிக்-கப்படலாம். அதன் விளைவாக, எல்லா மருந்துகளின் விலையும் உடனடியாகக் குறையும் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு சரி என்பதை அறிய, 23,000 உறுப்பினர்களைக் கொண்ட ‘தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்க’த்தின் மாநிலச் செய-லாளர் அருள்குமாரைச் சந்தித்தோம்.

''கட்டுப்படுத்தப்பட்ட மருந்து, கட்டுப்-பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்து (சிஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ, ஹிஸீநீஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ ஞிக்ஷீuரீs) என்ற இரண்டு பெரிய பிரிவுகளுக்குள் ஒட்டுமொத்த இந்திய மருந்துச் சந்தையையும் அடக்கிவிடலாம். இதில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கான மார்ஜின், மொத்த விற்பனையாளர்களுக்கு 8%&ஆகவும், சில்லறை வியாபாரிகளுக்கு 16%&ஆகவும் இப்போது உள்ளது. இந்த மார்ஜின் அளவு, கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்துகளுக்கு, 10 மற்றும் 20 சதவிகிதமாக உள்-ளது. இதுதான் இப்போதைய நிலைமை. நடக்கப்போவதாகச் சொல்லப்படுகிற மாற்றம் பற்றி அரசே இன்னும் ஒரு இறுதியான முடிவு எடுத்ததாகத் தெரிய-வில்லை. மார்ஜின் லெவலைக் குறைப்பதாகச் சொல்வது எங்களை மாதிரியான வியாபாரிகளுக்கா, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கா என்பதும் தெளிவாகவில்லை'' என்றவர், வேறு சில விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

''இந்திய மருந்துச் சந்தையில் 40% கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள்தான். இவற்றின் விலையை அரசே முடிவு செய்துவிடுகிறது. மீதியுள்ள மருந்துகளின் விலை-யைத்தான் கம்பெனிகள் தீர்மானிக்கின்றன. இதில் சில்-லறை விற்பனையாளர்களுக்கு மட்டும் அதிக மார்-ஜின் நிர்ணயிக்கப்படுவது உண்மைதான். அதன் காரணம், ஒரு மெடிக்கல் ஷாப் நடத்துவதற்கான செலவுகள் மிக அதிகம் என்பதுதான். அந்த மார்ஜின் லெவலைத் தாண்டி அதாவது எம்.ஆர்.பி&யை விட அதிகமான விலைக்கு விற்றால் எங்கள் மீது தவறு சொல்லலாம். நிஜத்தில், இப்போது தெருவுக்குத் தெரு பெட்டிக்கடை போல மெடிக்கல் ஷாப்கள் வந்துவிட்டதால், வியாபாரப் போட்டி காரணமாக மார்-ஜின் லெவலைக் குறைத்துதான் எல்லோரும் விற்-கிறார்கள். மற்றபடி லாபம் குறைவாகக் கிடைக்கும் மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்வதில்லை என்ப-தெல்லாம் பொய்...'' என்றார்.

அரசு மனது வைத்து மருந்துகளின் விலையைக் குறைத்தால், நிச்சயமாக மாத பட்ஜெட்டில் பெரும் தொகை மீதமாகும். அதைக்கொண்டு இன்னும் முறையாகத் திட்டமிட்டுச் சேமித்து முதலீடு செய்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். மனம் வைக்குமா அரசு!