Monday, April 28, 2008

மண்ணில் புதைந்த ரோஜாக்கள்

விதியின் கைகள் மட்டுமல்ல, அதன் விரல்கள் கூட மிக வலியது போலிருக்கிறது. செவிலியரின் விரல்களில் இருந்து சிரிஞ்ச் வடிவில் சிரித்த விதி, பொன் போன்ற நான்கு மழலைகளை புதைகுழிக்கு அனுப்பிவிட்டது. ஆம்! திருவள்ளூர் மாவட்டத்தில் விதி தட்டம்மை தடுப்பூசி வடிவத்தில் வந்து நான்கு தளிர்களைச் சாய்க்கும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? பிறந்து பத்து மாதங்கள் முடிவடைவதற்குள் அந்த மழலைகளை மரணத்தின் பசிக்குப் பறிகொடுத்து விட்டு, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் அதன் பெற்றோர்கள்.

அந்தச் சம்பவம் நடந்த நாளை கறுப்புப் புதன் என்றுதான் சொல்ல வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டையில் உள்ள கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த செவிலி ஒருவர், வீடுவீடாக குழந்தைகளுக்கு தட்டம்மை (மீசிலியஸ் வேக¢சின்) தடுப்பூசி போட வந்திருக்கிறார். முதலில் மோகன், ஒளியராணி தம்பதியின் ஒரே குழந்தையான மோகன ப்ரியாவுக்கு அவர் ஊசி போட்டிருக்கிறார்.

அடுத்ததாக சுகந்தியின் குழந்தை பூஜாவுக்கு ஊசி குத்தப்பட்டுக் கொண்டிருந்தபோதே மோகனப்ரியாவுக்கு லேசாக வலிப்பு வந்திருக்கிறது. ‘ஊசி குத்திய வலியால் மோகனப்ரியா துடிக்கிறாள், வேறு ஒன்றுமில்லை’ என்ற எண்ணத்தில் மூன்றாவதாக இருந்த அற்புதம் என்பவரின் குழந்தை நிவேதா நந்தினிக்கும் ஊசி போட்டிருக்கிறார், அந்தக் கடமை தவறாத செவிலி. அவ்வளவுதான். மூன்று குழந்தைகளுக்கும் வலிப்பு ஏற்பட்டு, வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியிருக்கிறது. பிஞ்சு உடல்கள் நீலம்பாரிக்க ஆரம்பித்தன.

துடித்துப் போனார்கள் பெற்றோர்கள். ‘அய்யோ நான் என்ன செய்வேன்?’ என்ற அலறலுடன், அந்தச் செவிலியின் துணையோடு குழந்தைகளைத் தூக்கிக¢ கொண்டு கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடியிருக்கிறார்கள். அங்கே குளுக்கோஸ் ஏற்றியும் நிலைமை சீர்படவில்லை. அங்கிருந்த செவிலியர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் கேட்டிருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் வந்து விடுகிற வாகனமா? ‘அதோ இதோ’ என்று திருவள்ளூர் மருத்துவமனையில் இருந்தவர்கள் சால்ஜாப்பு சொன்னார்களே தவிர, ஆம்புலன்ஸைக் காணோம்.

இங்கோ அழுகையும், கதறலுமாக பெற்றோர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்க, ஒருமணி நேரம் இந்த காத்திருப்பிலேயே ஓடிப்போனது. இனிமேலும் காத்திருந்து பயனில்லை என்ற நிலையில், கூலிவேலை செய்து குருவி மாதிரி சேர்த்த பணத்தில் நானூறு ரூபாயைக் கொடுத்து வாடகை கார் ஏற்பாடு செய்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் பெற்றோர்கள். அங்கே குழந்தைகள் ஏற்கெனவே இறந்து விட்டதாக உதட்டைப் பிதுக்கி விட்டார்கள் டாக்டர்கள். அவ்வளவுதான். ஆபத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய தடுப்பூசியே அந்த மூன்று குழந்தைகளுக்கும் எமனாகி விட்டது.

குழந்தை நந்தினியை இழந்து குமுறிக் கொண்டிருந்தார் அவளது தந்தை ஏழுமலை. குழந்தையின் தாய் அற்புதத்தை தேற்றக்கூட திராணியில்லாமல் இருந்த அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

‘‘அய்யா எனக்கு ஐம்பத்தஞ்சு வயசாகுது. என் மனைவி அற்புதத்துக்கு நாற்பத்தஞ்சு ஆகுது. முதல் புருஷனால் அவளுக்கு இருபது வருஷமாகக் குழந்தை இல்லை. குழந்தை ஏக்கத்தில் இவள் பைத்தியக்காரி மாதிரி ஆனதால் புருஷன்காரன், இவளை விட்டுவிட்டுப் போய்விட்டான். ஆதரவில்லாத இவளை என் மனைவியே எனக்கு இரண்டாந்தாரமாகக் கட்டிவச்சா. மூணு வருஷம் கழிச்சு இவளுக்குக் குழந்தை உண்டானபோது இவ அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இந்த வயசில் அபூர்வமா பிறந்த குழந்தையை பொத்திப் பொத்தி வளர்த்தா. இப்போ அந்தக் குழந்தையைப் பறிகொடுத்திட்டு பைத்தியக்காரி மாதிரி இவ தனியா கதறிக்கிட்டு இருக்கா பாருங்க. இந்த வயசில இனி எங்களுக்கு எப்படிய்யா திரும்பவும் குழந்தை பிறக்கும்?’’ என்று தோளில் கிடந்த துண்டால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழத்தொடங்கினார் ஏழுமலை.

‘‘என் குழந்தையை உயிரோடு தரச் சொல்லுங்கய்யா. காசு, பணம் எங்கிட்ட கொஞ்சம்தான் இருக்கு. இருந்தாலும் என் மகளை ராணி மாதிரி பார்த்துப்பேன்’’ என்று நம்மைப் பார்த்துக் கேட்ட அற்புதத்தின் முகத்தில் தெரிந்த சோகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

பலியான மற்றொரு குழந்தை மோகனப்ரியாவின் தந்தை மோகனிடம் பேசினோம். ‘‘குழந்தைக்கு ஊசி குத்தியதும் வாயில் இருந்து நுரை தள்ளியதைப் பார்த்து என் மனைவி மயங்கி விழுந்து விட்டாள். குழந்தை இறந்தது கூட இன்னும் தெரியாமல் பித்துப் பிடித்தவள் போல் மகளுக்காக வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறாள். அய்யோ, நான் வெறும் கையோடு போனால் அவள் செத்தே போய்விடுவாளே’’ என்று தலைப்பிரசவத்தில் பிறந்த மகளை இழந்த துயரத்தில் கதறி அழுதார் மோகன்.

குழந்தையை இழந்த இன்னொரு தாய் சுகந்தி, அழுது கண்ணீர் வற்றிப் போன நிலையில் தன் கணவர் அல்லிமுத்துவின் தோளில் சாய்ந்து தேம்பிக¢ கொண்டிருந்தார். ‘‘குளுக¢கோஸ் பாட்டிலோடு என் குட்டி மகள் பூஜாவை கையில் ஏந்திக¢ கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தேன். குழந்தை உயிர் போயிடுச்சுன்னு சொல்லி என்னைச் சாகடிச்சிட்டாங்களே.. நடுராத்திரியில எழுந்து பசியில் அழுவாளே என் செல்லம். அவளை அறுத்து சோதனை பண்ணப் போறாங்களாம். ஐயோ! வேண்டாம்னு சொல்லுங்கய்யா!’’ என்று சோகத்தில் குலுங்கினார் சுகந்தி.

இதற்கிடையே, தட்டம்மை தடுப்பூசி திருத்தணி அருகிலும் அதன் வேலையைக் காட்டிவிட்டது. அங்கே வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்த குப்பையா என்பவரின் மகன் லோகேஷ் என்ற பதினொரு மாதக¢ குழந்தையையும் தடுப்பூசி பலி கொண்டு விட்டது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பியும் பலனில்லாமல் குழந்தை லோகேஷ் இறந்து போனான். இந்த இரு சம்பவங்களிலும் தடுப்பூசி குத்திய செவிலிகள் ஜெயலலிதா, பார்வதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதோடு தமிழகம் முழுவதும் தட்டம்மை தடுப்பூசி போடுவது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பென்னலூர், மற்றும் வெங்கிட்டாபுரம் பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி குத்தப்பட்ட நான்கு குழந்தைகள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த மூன்று பெண் குழந்தைகளையும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.சிவாஜி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அமைச்சரிடம் பேசினோம். ‘‘மத்திய அரசு சார்பில், அனுப்பப்படும் தடுப்பு மருந்துகளே நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட தட்டம்மை தடுப்பு மருந்து, அரசின் பொதுத் துறை நிறுவனமான ஹைதராபாத்தில் உள்ள ‘ஹியூமன் பயாலாஜிக¢கல் இன்ஸ்டிடியூட்’டில் இருந்து வாங்கப்படுகிறது. தவறு எங்கு நடந்தது? என்று விசாரணையில் தெரிய வரும். முதல்கட்டமாக, சம்பந்தப்பட்ட தடுப்பு மருந்துகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்’’ என்றார் அவர். அதன்படியே ஆய்வுக்காக இமாசல பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலரிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘நாடு முழுவதும் உள்ள ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடுகிறோம், தகுந்த பயிற்சி பெற்ற ஆரம்ப சுகாதார நிலைய செவிலிகள் அதாவது, மகப்பேறு உதவியாளர்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் போட அனுமதிக¢கப்படுகிறார்கள். குழந்தைகள் இறப்பதற்குக¢ காரணமாக இருந்த மருந்தை 2010_ம் ஆண்டு வரை பயன்படுத்த முடியும். இந்த மருந்தை இரண்டில் இருந்து எட்டு டிகிரி செல்சியஸ் என்ற தட்பவெப்ப நிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஆயுட் காலம் (எக்ஸ்பயரி டேட்) முடிந்த மருந்தையோ அல்லது குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் பராமரிக்கப்படாத மருந்தையோ பயன்படுத்தினால்தான் அது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது’’ என்றனர் அவர்கள்.

மற்றொரு தரப்பு அதிகாரிகள் கூறிய தகவலோ வேறு மாதிரியாக இருந்தன. ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தத் தட்டம்மை தடுப்பூசி மருந்து புனேயில் உள்ள ‘ஸ்ரீராம் வேக¢சின்’ நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு திடீரென ஹைதராபாத் ‘ஹியூமன் பயாலாஜிக¢கல் இன்ஸ்டிடியூட்’டில் இந்த மருந்தை வாங்க ஆரம்பித்தது. புனே நிறுவனம் சப்ளை செய்த ஒரு டோஸ் மருந்தின் விலை எட்டு ரூபாய். ஹைதராபாத் நிறுவனம் ஏழு ரூபாய்க்கு விநியோகம் செய்ய ஒப்புக் கொண்டதால், மத்திய அரசு இப்படி நிறுவனத்தை மாற்றியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரத்தில் உள்ளூர் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்த நிறுவனங்களை மூடக¢கூடாது என்று அங்குள்ள தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புக் காட்டுவதால் அங்கே தடுப்பு மருந்துகள் தொடர்ந்து உற்பத்தியாகி நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி தரமற்ற தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டால் குழந்தைகள் மரணமடைய யாரைக் கேட்க வேண்டும்?’’ என்றனர் அவர்கள். அரசின் அலட்சியமோ? அதிகாரிகளின் அலட்சியமோ? சின்னச்சின்ன ரோஜாக்களை மண்ணுக்குள் போட்டுப் புதைத்துவிட்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்.

ஸீ வெற்றி
படங்கள்: கென்னடி

ஆற்காட்டார் என்ன சொல்லப் போகிறார்?

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் போலியோ, தட்டம்மை உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் பராமரிக்க வேண்டியது அவசியம். மின்சாரம் தடைபடும்போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மருந்துகளை எடுத்து அதற்கென உள்ள பெட்டிகளில் ஐஸ்கட்டிகளுக்கு நடுவே வைத்திருக்க வேண்டுமாம்.

ஆனால், கடந்த சில மாதங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் அந்த மருந்துகளை முறைப்படி பராமரிக்க முடியாமல் போயிருக்கலாம் என்று ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதுதான் கேள்வி.

தனியாருக்குப் போகும் தடுப்பூசி மருந்து உற்பத்தி!

தட்டம்மை தடுப்பூசியால், திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் இறந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் இரண்டு லட்சம் குழந்தைகளுக்கு இதே தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், அவர்களின் கதி என்ன என்று பதறிப்போய் உள்ளனர் தாய்மார்கள்.

இதுபற்றி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களான குன்னூர் லூயி பாஸ்டியர் ஆய்வு நிறுவனம், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், இமாசலப் பிரதேசத்தில் உள்ள கசாலி ஆய்வு நிறுவனம் ஆகியவை லாப நோக்கில்லாமல் கடந்த நூறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றை மூடிவிட்டு தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. ‘இந் நிறுவன மருந்துகள் தரமில்லை, சான்றிதழ் தர மாட்டோம்’ என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வது இவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனமும், பொதுத்துறையும் இணைந்து நானூறு ஏக்கர் பரப்பளவில் போலியோ சொட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை செங்கல்பட்டில் அமைக்க முடிவு செய்துள்ளன. இதற்காக கடந்த வாரம் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அன்புமணி கலந்து கொண்டார். இதுவரை போலியோ மருந்து தயாரிப்பில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத இந்துஸ்தான் நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் தரம் எப்படி இருக்கப் போகிறது?

பல நேரங்களில் காலாவதியான தடுப்பூசி மருந்துகளைக்கூட தனியார் நிறுவனங்கள், புதிய லேபிள் ஒட்டி அனுப்பி வைக்கின்றன. திருவள்ளூர் சம்பவத்துக்கு இதுகூட காரணமாக இருக்கலாம். வரும் காலங்களில் போலியோ தவிர, மற்ற தடுப்பூசி மருந்துகளைப் போடும்போது, டாக்டர்கள் குழுவும், ஆம்புலன்ஸ§ம் தயாராக இருக்க வேண்டும். மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு போதிய அதிகாரம் கொடுத்து, ஒவ்வொரு மருந்தையும் ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு, குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. இல்லாவிட்டால் இறப்புகளைத் தவிர்க்க முடியாது. தடுப்பூசி மருந்து தயாரிப்பை முழுக்க முழுக்க தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிக்காகவே இதுபோன்ற மரணங்கள் ஏற்படுத்தப்படுகிறதா என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது’’ என்று அதிர்ச்சியூட்டினார் அவர்.

நாம் டாக்டர்கள் சங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியைத் தொடர்பு கொண்டோம். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் பிசியாக இருந்தார். கடைசி வரை நம்மால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்றாலும் மத்திய அரசு சார்பில் விசாரணை செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளார்.