Thursday, January 24, 2008

பங்கு சந்தை வீழ்ச்சி

கடந்த ஒரு வாரமாகவே பங்கு சந்தை பலத்த சரிவுக்குள்ளாகி வருகின்றது. நேற்று 10% வரை சரிந்து பின்னர் 3% மீண்டு முடிவில் 7% இழப்பில் முடிந்திருந்தது. நேற்றைய தின துவக்கத்திலேயே 500 புள்ளிகள் இழப்புடன் மும்பை பங்கு சந்தை துவங்கியது. நேரம் செல்ல செல்ல சிறு முதலீட்டாளர்களூம் F & O முதலீட்டாளர்களும் பயத்தின் காரணமாக ஏகத்திற்கும் பங்குகளை விற்க தொடங்க பிற்பகலில் 2100 புள்ளிகள் வரை சரிவடைந்திருந்தது. எனினும் முதலீடு நோக்கில் கடைசி அரை மணி நேரத்தில் 700 புள்ளிகள் உயர்ந்து 1400+ புள்ளிகள் இழப்புடன் முடிந்தது.

இன்று காலை தொடங்கியதுமே முதலீட்டாளர்களின் பயம் காரணமாக எடுத்த எடுப்பில் 2000+ புள்ளிகள்குறைய பங்கு சந்தை சுமார் 1.5 மணிநேரம் தற்காலிகமாக மூட்டப்பட்டது. மேலும் F & O விற்பனையும் நாள் முழுவது நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் எல்லா முதலீட்டாளர்களூம், தரகர்களும் அரசின் தலையீட்டை எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு கடந்த 2 நாட்களாகவே இருக்கின்றது. அரசு தலையிடாததை கண்டித்து எல்லா வலைதளங்களிலும் பதிவர்களும் முதலீட்டாளர்களும் நிதி அமைச்சரை திட்டி தீர்த்தனர். இன்று காலை அதனால் வேறு வழியின்றி நிதியமைச்சர் திருவாய் மலர்ந்தார்.

அதாவது முதலீட்டாளர்கள் பயம் கொள்ள வேண்டாம். தரகர்களுக்கு தேவையான லிக்விடிட்டி வழங்கப்படும். அதற்காக LIC, UTI ஆகிய நிறுவனங்கள் பங்குகளை வாங்கும் என்று அறிவித்தார். அதன் பின்னர் சந்தை சரிவிலிருந்து மீளத்தொடங்கியது.

இதே காங்கிரஸ் அரசில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது 10 வருடங்களுக்கு முன்னர் இதே ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டுமென்று விருப்பம் மிகக்கொண்டு உலக வங்கியின் வலியுறுத்தல் காரணமாக முயற்சித்தார். அதை அந்த நிறுவன தொழிலாளர்களும் முகவர்களும் பெரிய முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டு சென்று 1 கோடி கையெழுத்துகளை மக்களிடம் பெற்று(சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நானும் ஒரு கையெழுத்து போட்டிருக்கின்றேன்.) குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க தனியார் மயம் என்னும் முயற்சியை உடனடியாக அரசு கைவிட்டது. அதன் பின்னர் தனியாரும் காப்பீடு துறையி அனுமதிக்கப்பட்டு ஏராளமான திடீர் நிறுவனங்கள் முளைத்து LIC ஐ சமாளிக்க முடியாமல் விரைவில் காணாமல் போயின(உம். AMP Sanmar). காரணம் அது கடைப்பிடித்த நேர்மை மற்றும் தரமான சேவை. உச்சகட்டமாக ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் காப்பீடு நிறுவனம் மகாராட்டிரத்தில் தடை செய்யப்பட்டதும் நடைபெற்றது.

அன்று LIC என்னும் தங்க முட்டையிடும் வாத்து தனியார் மயம் என்கிற கத்தியால் வெட்டு பட்டிருந்தால் இன்று பங்கு சந்தை காப்பாற்ற ஒரு நிறுவனம் இல்லாமல் போயிருக்கும். அரசும் முதலீட்டாளர்களை கைவிட்டு தனியார் மயத்தை ஒழித்திருக்கும். என்ன செய்ய தனியாரை காக்கவும் அரசு நிறுவனமே தேவை.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கூற்றை அரசு மீண்டும். மெய்ப்பித்திருக்கின்றது. மேலும் சந்தையில் இந்த வீழ்ச்சி தொடருமானால் அரசு நிச்சயம் PF பணத்திலும் கைவைக்க கூடும்.

சந்தையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக இன்று பங்கு தரகள் பரிமாரிக்கொள்ளும் வாசகம்

Reliance On - Market Gone.

பங்கு சந்தை வீழ்ச்சியில் ரிலையன்ஸ் பவர் ஐபிஓவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுதான் வீழ்ச்சியை துவக்கி வைத்தது. ஆரம்பத்தில் முதல் நாளிலெயே 10 மடங்கு விண்ணப்பங்கள் குவிய அப்பொழுது உடனடியாக பங்கு சந்தை.சிதம்பரம் நாட்டின் அடிப்படை மிகவும் வலிமையாக இருக்கின்றது என்று மார்தட்டினார். அவருடைய நம்பிக்கை இரண்டு நாட்களில் அவநம்பிக்கையாகிவிடும் என்று அப்பொழுது அவர் உணர்ந்திருக்க மாட்டார்.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய எல்லா முதலீட்டாளர்களும் பணத்தை பங்கு சந்தையிலிருந்து எடுக்க தொடங்கியதால் முதல் கட்ட வீழ்ச்சி தொடங்கியது. அதை இறுதி மூச்சில் இருக்கும் அமெரிக்க பொருளாதாரம் தன்பங்கிற்கு உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதனால் வெளிநாட்டு முதலீடு ஏகத்திற்கும் சந்தையிலிருந்ந்து திரும்பபெறப்பட்டது. இதனாலும் சந்தை சரிந்தது. சந்தை சரிவிற்கு முன்னர்தான் ரிலையன்ஸ் பவர் 79 மடங்கு விண்ணப்பம் பெற்றதாகவும் அது சாதனை என்றும் அனில் அம்பானி உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்றும் பத்திரிகைகள் பரபரத்தன. எல்லாமே 2 நாட்கள்தான்.

பங்குச் சந்தை இந்த அனில் அம்பானியை இன்று 1000+ இடத்திற்கும் முகேஷ் அம்பானியை 101 வது இடத்திற்கும் டி.எல்.எஃப். உரிமையளர் கே.பி.சிங்கை 250 ஆவது இடத்திற்கும் உலக அளவில் அழைத்து சென்றுள்ளது. இதன் உச்சமாக ரிலையன்ஸ் பவர் பங்கு கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுது செக்குகளுக்கு ஸ்டாப் பேமண்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன(இதை வதந்தி என்று அனில் அம்பானி கூறியுள்ளார்). இதிலும் ரிலையன்ஸ் சாதனை படைக்கும் என்று நம்பலாம். லிஸ்டிங்கில் 1000 ரூபாய்க்கும் மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் பவர் இப்பொழுது ஒளியிழந்து 450க்காவது வெளியாகுமா இல்லை இன்னும் கீழே வெளியாகுமா என்று எதிர்பார்க்கும் அளவில் உள்ளது.( 16.01.2008 அன்றே கிரே மார்கெட் பிரீமியம் என்றழைக்கப்படும் தொகை 470 இலிருந்து 420 ஆகவும், வெளியீட்டின் இறுதி நாளன்று 320 ஆகவும் நேற்று 150 ஆகவும் தேயந்து போனதிலும் ரிலையன்ஸ் பவர் சாதனை புரிந்துள்ளது.)

இன்றைய பங்கு மார்கெட் வார்த்தை Reliance Power On - India Gone.(இது ரிலையன்ஸ் பவர் விளம்பரங்களில் Riliance Power On - India On என்று வரும்).

விரைவில் அமெரிக்கா பொருளாதார சரிவை(Recession) அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அது அமெரிக்க தேர்தலுக்கு பிறகாவது அறிவிக்கப்படும். அப்பொழுது சந்தை மேலும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நலம் என்பதே இறுதி நீதி.

Monday, January 21, 2008

123 அணு ஒப்பந்தம்

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி நிறையவே பேசப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்று அணுஆயுத ஒழிப்பு மற்றும் அமை திக்கான மக்கள் இயக்கங்களும், பொது அமைப்புகளும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.

இந்த ஒப்பந்தம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று மட்டுமல்ல, அமைதிக்கு எதிரானது, நிலைத்த எரிசக்தி உருவாக்கத்துக்கு எதிரானது, சுயசார்பு பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் மக்கள் கருத்தை அறிவது இருக்கட்டும், நமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்ட ளிக்கக்கூட மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி, மதவாதக் கட்சி என்றால், காங்கிரஸ் அமெரிக்காவின் அடிமைக்கட்சியாக இருக்கிறது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.


இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின்நிலையங்களும், நமது மின்சாரத் தேவையில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே தற்போதுள்ள பூர்த்தி செய்கின்றன. இதை 7 சதவிகிதமாக உயர்த்தப் போகிறார்களாம்.
அதற்காகத்தான் இந்த ஒப்பந்தமாம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது. 3யை 7 ஆக்கவா, பிரதமர் சவால் விடுக்கிறார்? பதவியை ராஜினாமா செய்வேன் என்று மறைமுக மிரட்டல் விடுக்கிறார்?


மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் (!) கைகளில் இந்தியா இருப்பது எவ்வளவு மோசமானது என்று இப்பொழுது புரிகிறது.


இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான். இந்தியா இனி அமெரிக்க அடிமை. நமது வெளியுறவுக் கொள்கைகள் இனி அமெரிக்காவின் கட்டளைப்படியே இயங்கும். இரானை அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லையா. இந்தியாவுக்கும் பிடிக்காது. எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய அணுஆற்றல் அவசியம் என்று மன்மோகன் சிங் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். சரி, இதே எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யத்தானே இரானுடன் குழாய் மூலம் எண்ணெய் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதை ஏன் இரண்டாம் பட்சமாக ஒதுக்க வேண்டும்.


அப்படியானால் அணுசக்தியை அதிகரிப்பது, எரிசக்தி ஆகிய இரண்டும் இந்த ஒப்பந்தத்தைப் பொருத்தவரை முக்கியமானவை அல்ல என்பது புரிகிறது. அதைத் தாண்டி எது முக்கியம்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. சீனாவின் பொருளாதார போட்டியைச் சமாளிக்க பாகிஸ்தான் பயன்படுமா என்று அமெரிக்கா பரிசோதித்துப் பார்த்தது. பாகிஸ்தான் ஒத்துவரும் என்று தோன்றவில்லை. அதைத் தொடர்ந்து அவசரஅவசரமாக இந்தி யாவை கபளீகரம் செய்யப் பார்க்கிறது அமெரிக்கா. அதன் முழுமையான வெளிப்பாடுதான் இந்த ஒப்பந்தம்.


இப்படி இந்தியாவின் எதிர்காலம், வெளியுறவுக் கொள்கைகள், மற்ற நாடுகளுடனான உறவில் ஏற்படும் விரிசல் போன்றவற்றைப் பற்றி மக்கள் கருத்தை துளியும் அறியாமல், ஒப்பந்தத்தை நிறை வேற்றுவது தவறு என்று இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. மக்கள் சார்பில் இடதுசாரி கட்சிகள் ஏற்படுத்திய இந்த நெருக்கடி வரவேற்கத்தக்க அம்சம். நினைத்துப் பாருங்கள், பாரதிய ஜனதா ஆட்சியில் தொடர்ந்திருந்தால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை அனைத்து எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தி இருப்பார்கள். அதுதான் அந்தக் கட்சியின் கொள்கை.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் சாதகமா, பாதகமா என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம் முழுமையாக ஓராண்டு விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் என்ன நடந்தது? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு விடுதலை நாள், குடியரசு நாளின்போது மார்தட்டிக் கொள்ளும் இந்தியா, எந்த வகையிலும் ஜனநாயகத் தன்மையுடன் நடந்து கொள்ளாததையே இது காட்டுகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குள் நேரடியாக கால்பதித்துள்ள அமெரிக்கா, இந்தப் பகுதியில் உள்ள நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை நேரடியாக கட்டுப்படுத்தத் தொடங்கும்.


இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அமைதி முயற்சிகளைத் தொடராமல், ஆயுதப் போட்டியில் இறங்கும். ஆயுத விற்பனையின் ஒரு பாகமாகத்தான் ஆப்கானிஸ்தான், இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியது. அவை முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில், இந்த ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்குமே அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை ஏற்கெனவே விற்று வருகிறது. சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வருகை அதன் ஒரு பகுதிதான்.

இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய சூரியசக்தி, காற்றாலை, கடல்அலை, மனித உழைப்பு போன்றவற்றை மேம்படுத்துவது பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கப்படுவதில்லை. இந்த மாற்று எரிசக்திகளை மேம்படுத்துவதில் அரசு அக்கறை காட்டுவது போல் பெயருக்கு மட்டும் செயல்படுகிறது. மாற்று எரிசக்திகள் மூலமே நமது எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
உண்மையிலேயே அரசு கூறுவது போல் அணுசக்தி சிறந்தது என்றால், அது பற்றி வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கலாமே. விவாதம் நடத்தலாமே. எல்லா நேரமும் ஏன் மூடிமறைத்து நடத்த வேண்டும்?

அடுத்து...


இதுபோன்று நாட்டின் பாதையையே மாற்றியமைக்கக் கூடிய ஒப்பந்தங்கள், சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போன்றவற்றைப் பற்றி ஜனநாயக ரீதியிலான எந்த ஆலோசனைகளும் நடத்தாமல் நிறைவேற்ற இந்திய அரசியல் சாசனத்தில் வழியுள்ளது. முதலில், இது போன்ற ஒப்பந்தங்கள் பற்றி முன்கூட்டியே அறிவித்து, பொது விவாதம் நடத்த வேண்டியது கட்டாயம் என்று அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதில் நமது கருத்தை உறுதியாக வெளிப்படுத்த, நாம் ஒவ்வொரு வரும் ஓட்டளிக்கும் நடைமுறை வேண்டும். இதுவே நமது அடிப்படை கோரிக்கையாக இருக்க வேண்டும். (விஷயமே என்ன வென்று சொல்லாமல் கருத்துக் கணிப்பை நடத்தி தொலைக்காட்சி அலைவரிசைகள், இதழ்கள் தங்களுக்கு வசதியான முடிவை பிரபலப்படுத்துகிறார்கள்.)


இந்த ஒப்பந்தத்தின் எந்த அம்சத்துக்கும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதே உரிமை இந்தியா நாடாளுமன்றத்துக்கு இல்லை. அப்படியானால், இது அடிமை ஒப்பந்தம் இல்லாமல் வேறு என்ன? ஓர் அடிமையே, 'என்னை உங்கள் அடிமையாக வைத்துக் கொள்ளுங்கள். நான் நன்கு உழைப்பேன்' என்று கையெழுத்திட்டு ஒப்படைத்துக் கொண்டது போல் இருக்கிறது.


இந்த ஒப்பந்தம் மூலம் நமது இயற்கை வளம், அறிவு, குறைந்த கூலியில் உழைப்பு ஆகியவை அமெரிக்க முதலாளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. பொருளாதார மேதைகள் ஒட்டுமொத்தமாக நாட்டையே விற்க ஒப்பந்தம் இட்டுள்ளனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


வெள்ளையர்களை வெளியேற்றி நாடு விடுதலையடைந்து 60வது ஆண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், புதிய காலனி ஆதிக்கத்துக்கு மத்திய அரசே வரவேற்று வழியமைத்துக் கொடுத்துள்ளது.

(இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய அருணாராய், மேதா பட்கர், சந்தீப் பாண்டே அறிக்கை)

Thursday, January 17, 2008

ப. சிதம்பரத்துக்கு பாரத ரத்னா விருது பரிந்துரை

நாட்டில் அவரவருக்கு பிடித்த தலைவருக்கு அவரவர் பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏதோ எனக்கு பிடித்த இந்திய தலைவருக்கு நானும் பரிந்துரைக்கலாம் என்று நேற்று முழுக்க மல்லாக்க படுத்து யோசித்து பார்த்ததில் ஒரு ஒப்பற்ற தமிழர் ஒருவர் என் மனதில் தகுந்த காரணங்களுடன் தோன்றினார். அவ்ர் குறித்து என்க்கு தோன்றியவை


நம் இந்திய நாட்டில் கீழ்கண்ட வற்றில் அபரிமிதமான முன்னேற்றத்திற்காக உழைத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க நான் ஆதரிக்கின்றேன்

1. 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை புரிந்துகொள்ளூம் வகையில் திட்டங்களை திட்டமிடு வடிவமைத்து நாட்டின் மக்கள் தொகை குறைப்பில் மாபெரும் தொண்டாற்றியுள்ளார்.

2. பாகிஸ்தான், இலங்கை, சோமாலியா முதலிய தேசங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு குழந்தைகள் சாவில் இந்தியாவை முன்னனிக்கு கொண்டுவந்து சாதனை படைத்துள்ளார்.

3. 4 கோடி ஏழை இந்தியர்களின் காய்கறி விற்கும் உரிமையை பறித்து 4 மிகப்பெரிய பணக்காரர்களை உருவாக்கி பெரும் தொண்டாற்றியுள்ளார். இதனால் 18 லட்சம் பேருக்கு புதியதாக வேலைவாய்ப்பும், 2 கோடி பேருக்கு உடனடி வேலை இழப்பும் ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

4. பங்கு சந்தை சரியும்போதெல்லாம் குரல்கொடுத்து அதை மட்டும் வளர்த்தும், விவசாயிகள் தற்கொலையின் போதும், விவசாய பொருள்களின் உற்பத்தி குறைவின் போதும் கணாமலும் இருந்தும் பட்ஜெட்டில் காகிதத்தில் மட்டும் விவசாயத்தை வளர்க்க உறுதியளித்தும் தொண்டாற்றியுள்ளார்.

5. வறுமைக்கோட்டிற்கான அடிப்படை மாத வருமானத்தை 1990 இலிருந்து தொடர்ந்து ரூ.500 லேயே நிலைநிறுத்தி வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளை 27% ஆக குறைத்து சாதனை படைத்துள்ளார்.

6. அவரது தொகுதியிலேயே குறைந்த பட்ச வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 80ரூ தினக்கூலியை ரூ60 ஆக குறைத்து வழங்கி மக்களுக்கு ஒப்பற்ற சேவையாற்றியுள்ளார்.(இதில் ரூ.20 ஊழல்)

7. நாட்டில் 80% அமைப்பு சாரா தொழிலாளிகளின் தினசரி கூலியை ரூ.20 ஆக பல ஆண்டுகளாக நிலைநிறுத்தி சாதனை புரிந்துள்ளார்.

8. ஊக பேர வணிகத்தில் உணவுப்பொருள்களை உட்படுத்தி நாட்டு மக்களுக்கு திடீரென 3 ஆண்டுகளில் 200% விலையுயர்வை கொடுத்து அற்புதமான சேவை செய்து அதன் மூலம் நாட்டின் ஜி.டி.பி யை உயர்த்தி 9.5% ஜி.டி.பி வளர்ச்சியை உறுதி செய்துள்ளார்.

9. ஏகத்திற்கும் எல்லோருக்கும் வங்கிகளில் கடன் கிடைக்க செய்து பணவீக்கத்தை உயர்த்தி அதன் மூலம் எல்லா பொருள்களின் விலையையும் உயர்த்தி அதன் கணக்கில் ஜி.டி.பி ஐ உயர்த்தி அற்புத சேவைகளை புரிந்துள்ளார்.

இப்படி பல்வேறு காரணங்களுடன் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி ஐயும் பல்வேறு பொருள்களின் விலை உயர்வு மூலம் உயர்த்தி சாதனை படைத்துள்ள தமிழகத்தின் சாதனை நட்சத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பங்குசந்தை.சிதம்பரம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கிட 6 கோடி தமிழர்களின் சார்பில் நான் பரிந்துரைக்கிறேன்.

(ஆட்சேபம் தெரிவிக்க உங்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், எல்லா ஆட்சேபனைகளும் தயவு தாட்சன்யமின்றி நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது).