Monday, June 29, 2009

ஜார்கண்ட் விவசாயிகளின் சோகம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

என்பது வள்ளுவர் வாக்கு.

ஆனால் என்று என்ன நடக்கின்றது? உழுதுண்டு வாழ்பவர் தொழுதுண்டு வாழ்பவர்களின் தயவை நாட வேண்டிய அவல நிலையே நிலவுகின்றது.

இன்றைய தினசரிகளின் பிரதான செய்தி ஜார்கண்ட் விவசாயிகளின் 'மத்திய அரசிடம் தற்கொலை அனுமதி கேட்கும் கோரிக்கை'. அந்த அளவில் உள்ளது நாடு. இத்தாலி காங்கிரஸ் அறுபதாயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கொடுத்தோம் என்று சொல்லி சொல்லியே தேர்தல் களம் கண்டது. எங்கே சென்றது இந்த பணம்? கடன் வாங்கி அதை கட்டாமல் உடல் வலிமையாலும், செல்வாக்காலும் ஏமாற்றியவருக்கே சென்றது அந்த பணம்.

அப்படியென்றால் ஒழுங்காக கடனை திருப்பி கட்டியவர்களின் கதி? இது போன்ற தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கோரிக்கை தான். அந்த 60 ஆயிரம் கோடியை இலவசமாக தராது விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தாலே இன்று வங்கத்தில் மிகுதியாக வீணாகிக்கொண்டிருக்கும் நீரை ஜார்கண்ட் மாநிலத்தின் பக்கமாக திருப்பியிருக்கலாம். அவர்களும் ஓஹோ என்றில்லாவிட்டாலும் ஓரளவாவது பிழைத்திருப்பார்கள்.

இந்நிலையிலும் அமைச்சர் திரு.சரத் பவார் அவர்கள் பருவ மழை தாமதமானாலும் விவசாயம் பாதிக்கப்படவில்லை. விளைச்சல் அமோகமாக உள்ளது என்று பொய் பேசிக்கொண்டிருக்கின்றார். ஏற்கெனவே மரபணு மாற்ற விதைகளால் நைந்து போயிருக்கும் விவசாய சமூகம், 1.5 லட்சம் தற்கொலைகளை கண்டிருக்கின்றது. இப்பொழுது புதியதாக வறட்சியை எதிர்கொண்டிருக்கும் விவசாய சமூகம் எத்தனை தற்கொலைகளை காணுமோ?

இறைவா இந்திய விவசாயிகளை இத்தாலி காங்கிரசின் கொள்ளைக்கார அரசிடமிருந்து காப்பாற்று.